வயிற்று வலி குணமடைய எளிய பாட்டி வைத்தியம்!

வயிற்று வலி குணமடைய எளிய பாட்டி வைத்தியம்!

வயிற்று வலி வருவதற்கு பல்வேறு காரணங்கள் உள்ளன. பொதுவான வயிற்று வலி எதனால் ஏற்படுகிறது, அதன் காரணங்கள் என்னென்ன என்று பார்க்கலாம். செரிமானக் கோளாறு, மலச்சிக்கல், வாயு தொல்லை, பூச்சித் தொல்லை, வயிற்றுப் பொருமல், உணவு நச்சு முதலியனவாகும். இது மாதிரியான சாதாரண வயிற்று வலிக்குப் பாட்டி வைத்தியம் குறிப்புகளைப் பார்க்கலாம். இந்தக் குறிப்புகள் குழந்தைகள் முதல் (5+ வயது) பெரியவர்கள் வரை அனைவருக்கும் உதவும். இது தவிர மருத்துவ ரீதியாக பல்வேறு காரணங்கள் வயிற்று வலிக்கு உள்ளன. அது மாதிரியான வயிற்று வலிக்கு இந்த குறிப்புகள் பொருந்தாது.

 

வயிற்று வலி நீங்க எளிய பாட்டி வைத்தியம்:

 

சீரக நீர்

 

ஒரு பாத்திரத்தில் ஒரு சொம்பு அளவு தண்ணீரை எடுத்துக் கொள்ளவும். அதில் கறிவேப்பிலை, இஞ்சி மற்றும் சீரகம் ஆகியவற்றைச் சேர்த்துக் கொண்டு, நன்கு கொதிக்க விடவும். பின்னர் வடிகட்டியைக் கொண்டு தண்ணீரை வடித்து எடுத்துக் கொள்ளவும். இந்த தண்ணீரை அருந்தி வர, வயிற்று வலி குணமடையும்.

இதையும் படிங்க: குழந்தைகளை ஏசி அறையில் தூங்க வைக்கலாமா?

வேப்பம்பூ

வேப்பம்பூவைப் பறித்து வெயிலில் காய வைக்கவும். பின் இதனைத் தூளாகப் பொடித்துக் கொள்ளவும். இதை வெந்நீரில் கலந்து காலை மாலை என இருவேளையும் பருகி வரலாம். இதைச் செய்து வரும் பொழுது வாயு தொல்லையால் ஏற்பட்ட வயிற்று வலி குணமடையும்.

 

சுக்கு

 

சோம்பு அரைக் கப், தனியா கால் கப் மற்றும் சுக்கு ஒரு சிட்டிகை என்ற அளவில் எடுத்துக்கொள்ள வேண்டும். இந்த மூன்றையும் மிக்சியிலோ அல்லது அம்மியிலோ போட்டு அரைத்து பொடியாக்கி எடுத்துக்கொள்ள வேண்டும். பாத்திரத்தில் ஒரு சொம்பு தண்ணீரை ஊற்றிக் கொண்டு, பொடியைச் சேர்த்து விடுங்கள். இதை நன்கு கொதிக்கவிடவும். அரை சொம்பு அளவிற்குத் தண்ணீர் சுண்டியவுடன், இதில் பனை வெல்லமும் பாலும் சேர்த்து அருந்த வேண்டும். இது மலச்சிக்கலைக் குணமடையச் செய்யும்.

 

கசகசா

ஒரு தேக்கரண்டி அளவு கசகசா மற்றும் சிறிதளவு பனங்கற்கண்டையும் எடுத்துக் கொள்ளவும். இரண்டையும் மிக்ஸியில் அரைத்து நன்கு பொடித்துக் கொள்ளவும்.
இதைத் தினம் மூன்று வேளை எடுத்துக் கொள்வதன் மூலம் வயிற்று வலி நிவாரணம் அடையும்.

 

சுக்கு கருப்பட்டி

சுக்கு கருப்பட்டி மற்றும் நான்கு மிளகுகளை எடுத்துக் கொள்ளவும். இதை உரலில் போட்டு நன்கு இடித்துக் கொள்ளவும். இந்தப் பொடியை இரண்டு வேளை சாப்பிடுவதன் மூலம் வயிற்று வலி குணமடையும்.

 

சாதம் வடித்த நீர்

அஜீரணக் கோளாறை சரி செய்ய மற்றும் ஒரு எளிய வழி உள்ளது. இதற்குத் தேவையானது ஒரு டம்ளர் அளவு சாதம் வடித்த நீர் ஆகும். இதில் ஒரு சிட்டிகை அளவு மஞ்சள் தூள் கலந்து பருக வேண்டும். இவ்வாறு செய்வதன் மூலம் வயிற்றுத் தொந்தரவு குறையும்.

 

வெந்தயம்

நெய் விட்டு வெந்தயத்தை வறுத்துக் கொள்ளவும். பின் இதனை நன்கு பொடித்து தூளாக்கிக் கொள்ளவும். இந்தத் தூளை மோரில் கலந்து குடித்து வர வயிற்று வலி சரியாகும்.

 

குப்பைமேனிக் கீரை

குப்பைமேனிக் கீரையை ஒரு கப் அளவிற்குக் கிள்ளி எடுத்துக் கொள்ளவும். அத்தோடு நான்கைந்து பூண்டு பற்களைச் சேர்த்து நன்கு விழுதாக அரைத்துக் கொள்ளவும். அதைப் பிழிந்து சாற்றைத் தனியாக வடித்து எடுத்து வைத்துக் கொள்ளவும்.இந்த சாற்றைப் பருகி வர வயிற்றில் உள்ள பூச்சிகள் எல்லாம் அழியும். வயிற்றுவலியும் நிவர்த்தி அடையும்.

 

தேன்

ஒரு பாத்திரத்தில் ஒரு டம்ளர் அளவு தண்ணீர் ஊற்றிக் கொதிக்க விடவும். இதில் ஒரு தேக்கரண்டி அளவு தேனைக் கலக்கவும். இந்த நீரை அருந்தி வர வயிற்று வலி குணமடையும்.

 

குறிஞ்சிக் கீரை

குறிஞ்சிக் கீரையைக் காய வைத்துப் பொடித்து எடுத்துக் கொள்ளலாம். இந்தப் பொடியை நீரில் கலந்து அருந்திவர வயிற்று வலி சரியாகும்.

 

தண்ணீர்

வயிற்றுக் கோளாறு இருக்கும் சமயத்தில் அதிக அளவு தண்ணீர் எடுத்துக் கொள்வது நல்லது. இவ்வாறு தண்ணீர் பருகுவதன் மூலம் வயிற்றில் உள்ள நச்சுக்கள் சிறுநீர் வழியாக வெளியேற்றப்படும். அதனால் வயிற்று வலி சீக்கிரம் குணமாக வாய்ப்புள்ளது.

 

பாதிரிப் பட்டை

பாதிரிப் பட்டையைத் தண்ணீரில் ஊறவைத்து,அந்த நீரை அருந்துவதாலும் வயிற்று வலி சரியாகும். இந்த பாதிரி மரத்தின் பூ வெண் சிவப்பு நிறம் உடையது என்பது குறிப்பிடத் தகுந்தது.

 

படுக்கக்கூடாது

வயிற்று வலி இருக்கும் சமயத்தில் படுக்கக்கூடாது. அவ்வாறு படுக்கும் பொழுது வயிற்று வலி இன்னும் அதிகமாக வாய்ப்பு உள்ளது.

இஞ்சி சாறு

இஞ்சியை நன்கு இடித்து சாறு எடுத்துக் கொள்ள வேண்டும். ஒரு டேபிள்ஸ்பூன் சாற்றுடன் சிறிதளவு தேனைக் கலந்து கொள்ளவும். இதைப் பருகுவதன் மூலம் வயிற்றுவலி குணமடையும்.

 

இளநீர்

இளநீர் அருந்துவதன் மூலமும் வயிற்று வலியைச் சரி செய்து கொள்ளலாம். இளநீர் வயிற்றைச் சுத்தப்படுத்தி வயிறு சம்பந்தமான பிரச்சினைகளைத் தீர்க்கின்றது.

 

புதினா

புதினா தழைகளைப் பறித்துக் கொள்ளவும். இதைத் தண்ணீரில் அலசிக் கொள்ளவும். பிறகு தழைகளை நன்கு கசக்கிக் கொதி நீரில் போடவும். பிறகு இந்த நீரை வடித்து எடுத்துக் கொள்ளவும். இதில் தேவைப்பட்டால் எலுமிச்சைபழச் சாற்றையோ அல்லது தேனையோ கலந்து பருகலாம்.இந்த நீரை அருந்தி வர வயிற்று வலி குணமாகும்.

 

கற்றாழை

கற்றாழை சாற்றைப் பருகுவதன் மூலம் மலச்சிக்கல் குணம் அடையும். இந்த சற்று வழவழ தன்மையுடன் இருப்பதால் மிக்ஸியில் போட்டு அடித்துக் கொள்ளவும். இதை ஒரு டேபிள் ஸ்பூன் என்ற அளவில் மட்டும் எடுத்துக் கொள்வது நல்லது.

 

செம்பருத்தி

செம்பருத்தி இலைகளைக் காய வைத்து தூள் செய்து காலை மற்றும் மாலை என்று இரண்டு வேளைகளில் எடுத்துக்கொள்ளலாம். இதுவும் நிவாரணம் அடைய உதவும்.

 

வெற்றிலை

வெற்றிலை மற்றும் 4 மிளகுகளைச் சேர்த்து உண்பதால் வயிற்று வலி குணமடையும். இது சற்று காரத் தன்னையோடு இருந்தாலும் நல்ல பலம் கிட்டும். வெற்றிலையோடு கால் ஸ்பூன் பெருங்காயத்தூள் சேர்த்துச் சாப்பிட்டு வந்தாலும் வயிற்றுப் போக்கு தொந்தரவு குணம் ஆகும்.

இதையும் படிங்க: குழந்தைகளின் கண் பார்வை வளம்பெற?

அறுகம்புல்

அறுகம்புல்லில் ஏராளமான மருத்துவ குணங்கள் உள்ளன. அறுகம்புல் மற்றும் வேப்பிலையைப் பறித்து எடுத்துக் கொள்ள வேண்டும். இவைகளைத் தண்ணீரில் சேர்த்துக் கொதிக்க விட வேண்டும். தண்ணீர் சுண்டியவுடன் வடிகட்டி எடுத்துக்கொள்ள வேண்டும். இந்த நீரைச் சிறிதளவு தினமும் குடித்து வர வயிற்று வலி குணமடையும்.

 

மிளகு ரசம்

மிளகு ரசம் வைத்து அருந்துவதாலும் வயிற்றுவலி குணமாகும். மிளகு மிகவும் மருத்துவக் குணம் வாய்ந்தது. உடலில் உள்ள அனைத்து நச்சுக்களையும் அகற்றும் வல்லமை இந்த மிளகிற்கு உண்டு. இது வயிற்று வலியைக் குணப்படுத்த உதவும்.

 

ஓமம்

ஓமத்தை நீரில் போட்டுக் காய்ச்சிக் கொள்ளவும். இந்த நீரை வடித்து எடுத்துப் பருகி வர வயிற்று வலி பூரண குணமடையும். ஓமம் ஒரு சிறந்த மருந்து வயிற்று வலி நிவாரணி என்பது குறிப்பிடத் தகுந்தது.

 

எலுமிச்சை பழச்சாறு

வயிற்றில் உள்ள கோளாறை சரி செய்ய எலுமிச்சம் பழச்சாறு உதவுகின்றது. எலுமிச்சம் பழச்சாற்றை எளிய முறையில் தயாரித்துக் கொள்ளலாம். இந்த எலுமிச்சை பழச் சாறு வயிற்றுப் போக்கை உடனே கட்டுக்குள் கொண்டு வரும் வல்லமை கொண்டது.

 

பெருங்காயத்தூள்

இந்த பெருங்காயத் தூள் வயிற்றுப் பொருமலுக்கு மிகச் சிறந்த தீர்வாக உள்ளது.
சுடு நீரில் ஒரு டீஸ்பூன் பெருங்காயத் தூளைக் கலந்து பருகுவதன் மூலம் வயிற்றுக் கோளாறை சரி செய்து கொள்ளலாம். அல்லது பெருங்காயத்தூள் அரை டீஸ்பூன், சீரகத்தூள் ஒரு டீஸ்பூன் என்ற விதத்தில் செய்து எடுத்துக்கொண்டு, பனை வெல்லத்துடன் சேர்த்துச் சாப்பிட்டு வர அஜீரணத்தால் உண்டான பிரச்சினைகள் தீரும். மோரில் அரை டீஸ்பூன் பெருங்காயத் தூளை கலந்து பருகி வந்தாலும் வாயுத்தொல்லை பூரணமாகக் குணம் அடையும்.

 

மேலே கொடுக்கப்பட்டுள்ள அனைத்து குறிப்புகளும் உங்களுக்குப் பயனுள்ளதாக இருக்கும் என்று நம்புகிறோம். இந்த பாட்டி வைத்தியம் தொடர்பான குறிப்புகளைப் பயன்படுத்தினால் சாதாரண வயிற்று வலி எளிதில் குணமடையும்.

 

ஒரு தாயாக மற்ற தாய்மார்களுக்கு, வார்த்தைகள் அல்லது படங்கள் மூலமாக உங்களது அனுபவத்தைப் பகிர்ந்து கொள்ள நினைக்கிறீர்களா? தாய்மார்களை இணைக்கும் குழுவோடு சேர இங்கே கிளிக் செய்யுங்கள். நாங்கள் உங்களைத் தொடர்பு கொள்கிறோம்.

null

null