குழந்தைகளுக்குத் தீ காயம் ஏற்பட்டால் என்ன செய்ய வேண்டும்?

குழந்தைகளுக்குத் தீ காயம் ஏற்பட்டால் என்ன செய்ய வேண்டும்?

குழந்தைகளைக் காயங்களிலிருந்து, குறிப்பாகத் தீ காயங்களிலிருந்து பாதுகாப்பது மிகவும் முக்கியமான விஷயமாகும். கைக்குழந்தையாக இருந்து நடக்கப் பழகும் வரை நம் கட்டுப்பாட்டில் கவனமாகப் பார்த்துக் கொள்ளலாம். ஆனால், குழந்தை ஓடி ஆடி விளையாடத் தொடங்கும் வயதில் எப்போதும் கண்காணிப்பில் வைத்துக்கொள்ள முடியாதல்லவா? கீழே விழுவதால் ஏற்படும் லேசான சிராய்ப்பிலிருந்து, சூடான பொருட்கள் எதையாவது கவனக்குறைவாகக் கையாண்டு சுட்டுக்கொள்வது வரை ஏராளமான காயங்கள் ஏற்பட வாய்ப்புள்ளது. குறிப்பாக தீ காயம் என்பது அச்சமூட்டக்கூடிய ஒன்று. இதிலிருந்து குழந்தையைப் பாதுகாப்பது எப்படி? சிகிச்சை அளிக்கும் முறை என்ன? என்ன முதலுதவி? முன்னெச்சரிக்கை நடவடிக்கை எப்படி எடுப்பது? என்பதைப் பற்றி விரிவாகப் பார்க்கலாம்.

 

குழந்தைகளுக்குத் தீ காயங்கள் 

தீ காயம் என்றால் பட்டாசு வெடிப்பதாலோ அல்லது கையில் தீ படுவதாலோ ஏற்படும் காயம் என்று அலட்சியமாக நினைத்து விட வேண்டாம். குழந்தைகளைப் பொருத்தவரை வெப்பமான எதைக் கையில் எடுத்துச் சுட்டுக்கொண்டாலும் அது தீ காயம்தான். சூடான உணவு, தண்ணீர், பாத்திரம் ஆகியவற்றைத் தொடுவதால் ஏற்படுவதோ, பட்டாசு வெடிக்கும்போது கையில் சுட்டுவிடுவதோ அல்லது வேறு ஏதேனும் தீ விபத்துகளோ குழந்தைக்குக் காயத்தை ஏற்படுத்தக்கூடும்.

 

முதலுதவி

தீ காயங்களைப் பொருத்தவரை, காயம் ஏற்பட்டு அடுத்த சில நொடிகளில் தண்ணீரில் நனைக்க வேண்டும். தேங்கியிருக்கும் நீராக இல்லாமல், ஓடும் நீராக இருப்பது நல்லது. உடையைக் கழட்டுவதில் நேரத்தைச் செலவிடாமல் சுமார் 10 நிமிடம் வரையிலாவது, காயம் பட்ட குழந்தைக்கு இந்த முதலுதவியைச் செய்ய வேண்டும். பத்து நிமிடங்களுக்குப் பிறகு கையை உலர வைத்து, அதன் தீவிரத்தைப் பார்க்க வேண்டும். பார்க்கும்போதே சில நாட்களில் ஆறிவிடுமா என்பதைக் கண்டறிந்து விடலாம். அதன் பிறகு மருத்துவரை ஆலோசிப்பதும் வீட்டிலேயே சிகிச்சை அளிப்பதும் செய்யலாம். எந்த காரணத்துக்காகவும் தண்ணீருக்குப் பதிலாக வேறு ஏதேனும் களிம்பைப் பயன்படுத்தக்கூடாது. அது காயத்தை ஆறவிடாமல் தடுத்து, அந்த இடத்தை மேலும் பாதிக்கும்.

 

பெரிய காயம் என்றால், தண்ணீரில், நனைத்தபடியே பிணியூர்திக்கு அழைத்துவிட வேண்டும். அல்லது உதவிக்கு யாரையாவது வாகனத்தைத் தயார் செய்யச் சொல்ல வேண்டும். மருத்துவமனைக்குச் செல்லும் வரை, அது சில நிமிடங்களாக இருந்தாலும், தண்ணீர் முதலுதவி அவசியம்.

 

தீ காயங்களின் வகைகள்

 

தீ காயங்களை, அதன் ஆழம் மற்றும் தீவிரத்தை வைத்து மூன்று வகைகளாகப் பிரிக்கலாம்,  

 

முதல் வகை

லேசாகத் தோல் பரப்பில் மட்டும் ஏற்படுவது. சூடான பாத்திரங்களைக் கவனக் குறைவாக எடுப்பதன் மூலமாகவோ அல்லது வெந்நீர், பால் போன்றவைக் கொட்டுவதாலோ ஏற்படும் காயங்களை இந்த வகையில் சொல்லலாம். இந்த காயத்தால், தோல் சிவந்து போகும் அல்லது லேசான வீக்கம் ஏற்படும். இது குறித்து, பயப்படத் தேவையில்லை. ஒரு வாரக் காலத்துக்குள் குணமாகிவிடும்.

 

இரண்டாம் வகை

பட்டாசு தீ கையில் படுவது, கவனக்குறைவால் உடைகள் எரிந்து தோல் காயமாவது போன்றவற்றை இந்த வகையில் சேர்க்கலாம். தோலிலிருந்து சற்று தீவிரமாக உள் அடுக்கு வரை பாதிப்பு ஏற்படுத்தும் காயங்கள் இந்த இரண்டாம் வகையில் சேரும். தீ நேரடியாகத் தோலில்  படுவதால், இந்த வகை பாதிப்பு ஏற்படுகிறது. தோலின் அடி ஆழம் வரை இல்லாமல், முதல் இரண்டு அடுக்குகள் இதனால் சேதமடையும். முதல் வகை தீ காயங்களைவிட இதில் பாதிப்பு சற்று அதிகமாகவும், மோசமாகவும் இருக்கும். இந்த காயம் குணமடைவதற்கு 10 முதல் 15 நாட்கள் வரை ஆகலாம். இதனால் ஏற்படும் தழும்பு, சில நேரங்களில் மறையாமல் இருக்கலாம்.

 

மூன்றாம் வகை

இது உடல் பாகம் முழுவதும் தீயில் கருகுவதால் ஏற்படுவது. அதாவது தீ பட்டு, தோல், ரோமக்கால், ரத்தக் குழாய் வரை பல அடுக்குகள் எரிந்து காயமாவது இந்த வகையில் சேரும். இதன் பாதிப்பு மிக அதிகமாக இருக்கும். வலியைப் பொறுத்துக் கொள்ளவே முடியாது. அதுவும் குழந்தைகளால் தாங்கிக்கொள்ளவே முடியாது. இந்தப் பாதிப்புக்கு மருத்துவச் சிகிச்சை மட்டுமே தீர்வு. நாமாகக் குணப்படுத்த முடியாது. தேவைப்பட்டால் பிளாஸ்டிக் சர்ஜரி செய்ய வேண்டிய நிலையும் ஏற்படலாம்

 

சிகிச்சை

பெரும்பாலான காயங்களுக்குத் தண்ணீரில் நனைப்பதே போதுமானது. காயத்தைச் சுற்றிலும் கொப்புளங்கள் ஏற்பட்டிருந்தால், அதை உடைக்க வேண்டாம். அந்த கொப்புளங்கள் காயத்தை விரைவில் குணப்படுத்த உதவும். 

 

மூன்றாம் வகை தீக்காயங்களுக்கு மருந்துப் பொருட்களை மருத்துவரின் ஆலோசனையுடன் பயன்படுத்த வேண்டும்.

தண்ணீரில் குளித்த பிறகு, காயம் ஏற்பட்ட இடத்தை தூய்மையான துணி அல்லது நெகிழி காகிதத்தைக் கொண்டு மூட வேண்டும். இதனால் காயம் ஏற்பட்ட இடத்தில் கிருமிகள் தொற்றுவதைத் தடுக்கலாம்.

 

வலி குறையவில்லை என்றால், மருத்துவரிடம் ஆலோசனைப் பெற்று, அதற்கேற்ற வலி நிவாரணிகளைக் கொடுக்கலாம்.

 

மருத்துவரை எப்போது நாடலாம்?

மேற்குறிப்பிட்ட முதலுதவி காயத்துக்கு போதுமானதாக உங்களுக்குத் தோன்றினால், மருத்துவரை அணுகத் தேவையில்லை. குழந்தைகள் வலி தாங்காமல் அழுதபடியே இருந்தால், மருத்துவரின் ஆலோசனையுடன் வலி நிவாரணியைக் கொடுக்கலாம்.

 

வலி இல்லையென்றாலும், காயத்தின் தீவிரத்தைப் பொருத்து மருத்துவரை நாடி குழந்தைகளுக்கு சிகிச்சை அளிப்பது அவசியம். அதாவது காயத்தின் அகலமும் நீளமும் அதிகமாக இருந்தாலும், மருத்துவச் சிகிச்சை வேண்டும்.

 

மேலும், காயம் ஏற்பட்ட இடத்தைப் பொருத்து சிகிச்சை அளிக்க வேண்டும். அதாவது, கை, கால்களில் ஏற்படும் லேசான காயங்களுக்குப் பெரிதாக அலட்டிக்கொள்ளத் தேவையில்லை. முகம், தலை, பிறப்புறுப்பு பகுதிகள் போன்ற இடங்களில் பாதிப்பு ஏற்பட்டால், அது லேசானதாக உங்களுக்குத் தோன்றினாலும் மருத்துவச் சிகிச்சையும் மருத்துவரின் ஆலோசனையும் அவசியம்.

 

செய்யக்கூடாதவை

தயிர் குளிர்ச்சி தானே? வெண்ணெய் குளிர்ச்சி தானே என அவற்றையெல்லாம் பயன்படுத்தலாமா எனக் கேட்காதீர்கள். தண்ணீரைத் தவிர எதையும் பயன்படுத்தக்கூடாது. சிலருக்கு யாரோ கொடுத்த அறிவுரை போல, பற்பசை பயன்படுத்தும் பழக்கம் இருப்பதைக் கேள்விப்பட்டிருப்பீர்கள். அல்லது பார்த்திருப்பீர்கள். அதுவும் மிகத் தவறான விஷயம். மீண்டும் மீண்டும் சொல்வது ஒன்றே ஒன்றுதான். தீ காயத்துக்கு முதலுதவி என்றால் அது தண்ணீர் மட்டும்தான்.

 

முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள்

குழந்தைகளைப் பொருத்தவரை, வீட்டில் எந்த இடங்களிலெல்லாம் தீ காயம் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் இருக்கின்றன? எந்த காலகட்டத்தில் முன்னெச்சரிக்கையுடன் இருக்க வேண்டும்? உள்ளிட்டவற்றைப் பற்றிப் பார்க்கலாம்.

 

படுக்கையறை

ஹேர் ட்ரையர், ஹேர் ஸ்ட்ரெய்ட்னர் போன்றவற்றை உபயோகப்படுத்தும் தாய்மார்களா நீங்கள்? அப்படியென்றால் இவற்றில் ஒன்று குழந்தையைச் சுட்டுவிட வாய்ப்புள்ளது. குழந்தைகள் இருக்கும் வீட்டில், இதைப் பயன்படுத்தாமல் இருப்பது நல்லது. ஏனென்றால் எப்போது அதை எடுத்து, ஆள் இல்லாத நேரமாகப் பார்த்து அவர்கள் உபயோகப்படுத்திச் சுட்டுக்கொள்வார்கள் என்பது தெரியாது. அப்படிப் பயன்படுத்துவதென்றால், குழந்தை நன்கு தூங்கும் நேரத்தில் பயன்படுத்திவிட்டு, உயரமான இடங்களில் மறைத்து வைத்து விடலாம்.

 

குளியலறை

குளியலறையில் பயன்படுத்தப்படும் ‘வாட்டர் ஹீட்டரை’ கவனமாகக் கையாள வேண்டும். குழந்தைக்கு எட்டும் தூரத்தில் அதன் ஸ்விட்ச் இருந்தால், அவர்களாகவே போட்டுப் பயன்படுத்திச் சுட்டுக்கொள்ளும் வாய்ப்பு அதிகம். அவசியமான நேரத்தில் மட்டும் பயன்படுத்திவிட்டு, அதன் வயரை பிடுங்கிவிடுவது நல்லது. ஸ்விட்ச் எட்டாத தூரத்திலிருந்தாலும், ஸ்டூல், சேர் என எதையாவது போட்டு ஏறி ஸ்விட்சை ஆன் செய்வதற்கான வாய்ப்புகளும் உள்ளன.

 

சமையலறை

சமையலறையில்தான் சூடு போட்டுக்கொள்ளும் வாய்ப்புகள் அதிகம். சுடு தண்ணீர், சோறு, குழம்பு, குக்கர் என எல்லா பாத்திரங்களும் குழந்தைகளுக்கு எதிரிதான். பெரியவர்களைப் பொருத்தவரை அது தாங்கிக்கொள்ளக்கூடிய  வெப்பநிலைதான் என்றாலும், குழந்தைகளால் அதை ஜீரணிக்க முடியாது. விருந்து சமைக்கும்போது லேசாக சூடுபட்டு, குழந்தை அழுகிறது என வைத்துக் கொள்ளுங்கள். மொத்த விருந்துமே அம்போவாகி விடும். எனவே சமையல் அறையைப் பொருத்தவரை குழந்தைகளைத் தூர வைப்பது நல்லது. தொலைக்காட்சியில் குழந்தைகள் சமைக்கிறது என்பதற்காக விபரீத முயற்சிகளை மேற்கொள்ள வேண்டாம்.

 

தோட்டம் மற்றும் மொட்டை மாடி

தோட்டத்தில் என்ன தீ காயம்? என யோசிக்க வேண்டாம். தோட்டத்தைப் பொருத்தவரை தீ மூட்டிதான் காயமாக வேண்டியது இல்லை. ஏதேனும் இரும்பு பொருள் வெயிலால் சூடாக இருந்து அதைத் தெரியாமல் குழந்தை தொட்டு விட்டாலும் வினைதான். என்ன ஆகுமென்றெல்லாம் தெரியாது. பெரிதாகக் கூட வீங்கலாம். எதிர்பாராத விதமாகத் தவறி விழுந்து உடலில் வேறு பாகமெல்லாம் சுட்டுவிட்டால்? இது மட்டுமின்றி வெந்நீர் வைப்பதற்காகவோ அல்லது ஏதேனும் சமையலுக்காகவோ தோட்டத்தில் தீ மூட்டியிருந்து, அதன் நெருப்பு அணையாமல் இருக்கும்பட்சத்தில் குழந்தை அதில் கை வைத்து காயமேற்படவும் வாய்ப்புள்ளது.

 

எனவே, வெயிலால் சூடாகும் பொருட்களை வீட்டின் வெளிப்புறத்திலோ அல்லது மொட்டை மாடியிலோ வைக்க வேண்டாம். தீ மூட்டியிருந்தாலும் அதை வேலை முடிந்ததும் தண்ணீர் ஊற்றி அணைத்துவிட்டு, நன்கு குளிர்ந்த பிறகு அந்த இடத்தை விட்டு நகருங்கள். பஞ்ச பூதத்தில் ஒன்றான தீ எப்போது வேண்டுமானாலும் விஸ்வரூபம் எடுக்கலாம்.

 

முன்னெச்சரிக்கை காலகட்டம்

பண்டிகைக் காலங்களில் குழந்தைகளை வைத்திருப்பவர்கள் மிகவும் முன்னெச்சரிக்கையாக இருக்க வேண்டும். அதாவது தீபாவளி மட்டுமின்றி, பொங்கல், கார்த்திகை தீபம், மார்கழி மாத பூஜை, வீட்டில் ஹோம பூஜை போன்ற காலகட்டத்தில் மிகவும் கவனமாக இருக்க வேண்டும்.

 

அதாவது, குழந்தையின் உடை, குறிப்பாக ஆண் குழந்தைக்கு வேட்டி சட்டை, பெண் குழந்தைக்கு அணிவிக்கும் பட்டுப் பாவாடை போன்றவற்றில் எளிதில் தீ பற்றிக்கொள்ளும் வாய்ப்புகள் உள்ளது. பட்டாசு மட்டுமின்றி, வீட்டில் ஏற்றும் விளக்குகள் கூட ஆபத்தாக மாறலாம். இதில், பாலிஸ்டர் துணி எரியும்போது அது உடலில் ஒட்டிக்கொள்ளும் வாய்ப்பு அதிகம் என்பதால், தீபாவளி போன்ற சமயங்களில் பருத்தி உடையைத் தேர்ந்தெடுப்பது நல்லது. அல்லது உடலோடு ஒட்டிய உடைகளைத் தேர்வு செய்யலாம்.

 

ஊர் உலகம் தப்பாகப் பேசும் அது இது என வறட்டு கௌரவத்துக்காக மூன்று வயதுக் குழந்தைக்கு ஆடம்பரமாகப் பாதுகாப்பற்ற உடையை உடுத்துவதால் எந்த பயனும் இல்லை. அதையும் மீறிப் பயன்படுத்தியே ஆகவேண்டுமென்றால், சில மணி நேரம் மட்டும் அணிவித்து விட்டுப் பிறகு பாதுகாப்பான உடைக்கு மாறிக் கொள்ளலாம். 

 

வீட்டில் எதாவது ஹோமம் செய்பவர்கள், நெருப்பு அணையும் வரை காத்திருக்கும்போது குழந்தையைப் பாதுகாப்பாக வைத்துக்கொள்ள வேண்டும். சற்று கவனக்குறைவாக விட்டால், அவர்கள் அதில் என்னதான் இருக்கிறது என கை வைத்துப் பார்த்துச் சுட்டுக்கொள்ளும் வாய்ப்புகள் அதிகம்.

 

குழந்தைகளைப் பார்த்துப் பார்த்து ஆரோக்கியமான உணவளித்து, சரியான நேரத்தில் தடுப்பூசி போட்டு வளர்ப்பதோடு, இதுபோன்ற நேரங்களில் பாதுகாப்பாக, தீ காயங்கள் ஏற்படாமல் பார்த்துக் கொள்வதும் அவசியம்.

null

null