கணவன் மனைவி உறவு மேம்பட வழிகள்!

கணவன் மனைவி உறவு மேம்பட வழிகள்!

கணவன் மனைவி உறவு மிகவும் உன்னதமானது. எங்கோ பிறந்த ஒரு ஆணும் பெண்ணும் திருமணம் என்னும் பந்தத்தில் இணைகின்றனர். திருமணத்திற்குப் பிறகு தங்கள் இல்லற வாழ்க்கையை இனிமையாகத் தொடங்குகின்றனர். திருமண வாழ்வு என்பது குச்சி மிட்டாய் சாப்பிடுவது போல எளிதானது கிடையாது. அது ஒரு கரடுமுரடான நீண்ட பயணம் போன்றது. சாலையில் எப்படி மேடு பள்ளங்கள், குழிகள் நிறைந்துள்ளன? கிட்டத்தட்ட அப்படி தான் மன வாழ்க்கையும் கூட!

நிறைய காதல்கள், மோதல்கள், சண்டைகள், சமரசங்கள், சமாதானங்கள், விட்டுக்கொடுத்தல் என்று அத்தனையும் சேர்ந்த கலவையாக இருக்கும். இந்தப் பதிவில் கணவன் மனைவியின் மணவாழ்க்கை எந்த சிக்கலும் இன்றி சுவையானதாக இருக்க என்னென்ன வழிகள் எல்லாம் உள்ளன என்று பார்க்கலாம்.

இதோ கணவன் மனைவி இல்லறம் சிறக்கக் குறிப்புகள்

அன்பை வெளிப்படுத்துங்கள்

இல்லறத்தில் அன்புதான் ஆணிவேர் என்பது அசைக்க முடியாத உண்மை. இருவரும் ஒருவரையொருவர் மனதார நேசியுங்கள். வாய்ப்பு கிடைக்கும் போதெல்லாம் உங்கள் அன்பைப் பார்வையாலும், செய்கையால், வார்த்தைகளும் வெளிப்படுத்திக் கொண்டே இருங்கள். விளக்கிற்கு எண்ணெய் போல, ஒளிவீசும் வாழ்விற்கு அன்பு அவசியம். ‘ஐ லவ் யூ!’, ‘நீ அழகா இருக்க!’ இப்படி சில பல வார்த்தைகளைச் சொல்லிப் பாருங்கள். உங்கள் ஜோடி உங்களை அன்பு மழையில் திக்குமுக்காட வைத்து விடுவார்.

குறைகளை மாற்ற முயலுங்கள்

திருமணமான புதிதில் நகமும் சதையுமாக இருக்கும் பல தம்பதிகள் நாள்பட சண்டைக்கோழிகளாக மாறி விடுகின்றனர். இதற்கு என்ன காரணம் என்று சற்று ஆராய்ந்து பார்த்தால், ஆரம்பக்கால மணவாழ்வில் ஒருவரின் குறை மற்றவருக்கு முழுவதாக தெரிவதில்லை. நாட்கள் போகப்போக கணவன் மற்றும் மனைவி இருவருக்குமே மற்றவர்களிடம் உள்ள குறைகள் வெட்டவெளிச்சமாகப் புரியத் தொடங்குகின்றன.

கற்பனையாக வடித்து வைத்த விஷயம் ஒன்றாகவும் , உண்மை நிலை மற்றொன்று ஆகவும் உள்ளத்தை ஆண் பெண் என்று இருவராலும் ஏற்றுக் கொள்ள முடிவதில்லை. இதுவே பிற்காலத்தில் சண்டைகள் ஆகவும், விரிசல்கள் ஆகவும் உருமாறுகின்றன. மனிதர்கள் குறைகளையும், நிறைகளையும் கொண்டவர்கள்தான் என்ற உண்மையை உணர்ந்து கொண்டாலே தேவையில்லாத மனக்கசப்புகள் வராது. உங்கள் கணவர் உங்களிடம் குறிப்பிடும் நியாயமான குறைகளைக் களைய முனையுங்கள் . அதேபோல கணவனும் மனைவி கூறும் குறைகளை நிவர்த்தி செய்ய முயலவேண்டும்.

முடிவுகளைச் சேர்ந்து எடுங்கள்

கணவன்-மனைவிக்குள் வரும் ஒரு முக்கியமான பிரச்சனை, ‘தான் தான்’ என்ற உணர்வுதான்(EGO). தான் சொல்வதை மட்டுமே மனைவி கேட்க வேண்டும் என்று கணவனும், தான் கிழித்த கோட்டை கணவன் தாண்டக் கூடாது என்று மனைவியும் எதிர்பார்க்கின்றனர். இது மாதிரியான எண்ணங்கள் உறவை முழுதாக பாதிக்கும் என்பதை உணர மறுக்கிறார்கள். எந்த விஷயங்களாக இருந்தாலும் இருவரும் சேர்ந்து கலந்து ஆலோசித்தது, நன்மை மற்றும் தீமைகளை நியாயமாகப் புரிந்து முடிவுகளை எடுத்தால், போட்டி பொறாமை மனப்பான்மையே வராது.

மனம் விட்டுப் பேசுங்கள்

திருமணத்திற்கு முந்தைய கால கட்டத்திலும், அதற்குப் பிந்தைய சில மாதங்களிலும் கணவன்-மனைவியாக மணிக்கணக்கில் நீங்கள் இருவரும் பேசி இருப்பீர்கள். ஆனால் ஒரு கட்டத்தில் வேலை குழந்தை என்று வந்த பிறகு, இருவரும் பேசிக்கொள்ள கூட நேரம் இல்லாத சூழ்நிலை ஏற்பட்டிருக்கும். ஒருகட்டத்தில், ‘நீ யாரோ! நான் யாரோ!’ என்ற ரீதியில் கூட நாட்களோடு தொடங்கிவிடும். இருவரும் தங்கள் உணர்வுகளை வெளிப்படையாகப் பரிமாறிக் கொள்ளாமல் மனதிலேயே அடைத்து வைத்து ,மன அழுத்தத்திற்கு ஆளாகக் கூட நேர்ந்துவிடும். எத்தனையோ வேலைகள், சூழ்நிலைகள் இருக்கட்டுமே. நாம் வாழும் நாட்கள் மிகவும் குறுகியது. காலங்கள் வேகமாக ஓடிய பின்னர், ஒருநாளும் இழந்த சந்தோஷங்களை மீட்க முடியாது. அன்று வருந்துவதற்குப் பதில் இன்று முதலே நேரம் ஒதுக்கி மனம் விட்டுப் பேசலாம்.

உறவுகளை மதியுங்கள்

பொதுவாகக் கணவனுக்கு மனைவி குடும்பத்தோடு ஒட்டி பழகுவது சிரமமாக உள்ளது. அதேபோல மனைவிக்கும் கணவன் குடும்பத்தாரோடு உறவாடுவது சற்று சிரமமானதாகவே இருக்கின்றது.விதிவிலக்கு உண்டு என்ற போதிலும் பெரும்பான்மையான சூழல் இப்படி தான் உள்ளது. இதில் வீட்டுக்கு ஒருவர் குடும்பத்தினர் வரும் பொழுது மற்றொருவர் பாராமுகமாக நடந்து கொள்கின்றனர். இது முற்றிலும் தவறானது. மனைவிக்காக கணவன், மனைவி உறவுகளுடனும், கணவனுக்காக மனைவி ,கணவன் உறவுகளுடனும் அன்பாக நடந்து கொண்டாலே பல சண்டைகள் தவிர்க்கப்பட்டு விடும்.

வேலைகளைப் பங்கிட்டுக் கொள்ளுங்கள்

வீடு சார்ந்த விஷயங்கள் ,குழந்தை பராமரிப்பு என்று நிறைய வேலைகள் அன்றாடம் இருந்து கொண்டே தான் உள்ளது. இந்த மாதிரி சமயங்களில் ஒருவருக்கொருவர் அனுசரணையாக உதவிகளைப் பரிமாறிக் கொண்டாலே உறவு அழகாக நிலைத்திருக்கும். ‘நான் செய்ய மாட்டேன்! இது என் வேலை இல்லை!உன் வேலை!’ என்பது போன்ற மனப்பான்மைகளை எல்லாம் முளையிலேயே வளரவிடாமல் தடுத்து விடுங்கள். நம் குடும்பம் ,நம் வீடு ,நம் குழந்தைகள் என்ற எண்ணத்தை வளர்த்துக் கொள்ளுங்கள்.

வாதம் வேண்டாம்

எவ்வளவுதான் ஒற்றுமையான தம்பதிகளாக இருந்தாலும் சில சந்தர்ப்பங்களில் கருத்து வேறுபாடுகளைத் தவிர்க்க இயலாது. அது மாதிரியான விஷயங்களில் வாதிடத் தொடங்கினால், சண்டை முற்றி பிரச்சனைகள் வலு எடுக்க தொடங்கும். அதனால் வாதங்களைத் தவிர்த்து விடுவது சிறந்தது. சில மணி நேரங்கள் அல்லது சில நாட்கள் கழித்து மீண்டும் அதே செய்தியைப் பற்றிப் பேசும்பொழுது பிரச்சனை சுமுகமாகத் தீரும்.இதை அனுபவத்தால் நன்கு உணரமுடியும்.

பொய் சொல்ல வேண்டாம்

ஒரு சுமுகமான உறவு நிலவ உண்மை மிகவும் அவசியம். கணவனோ மனைவியோ எந்த விஷயத்தையும் ஒளிவு மறைவின்றி பகிர்ந்து விடுவது நல்லது. உதாரணமாகச் சொல்லாமல் கடன் வாங்குவது போன்றதைச் சொல்லலாம்.பொய் சொல்லி மறைக்கும் பொழுது அது பிற்காலத்தில் வெளியே வந்துவிடும். இதனால் மன வாழ்க்கை முறையும் வாய்ப்பும் ஏற்பட்டுவிடும்.எந்த உறவிலும் நேர்மை மிக அவசியம் என்பதைக் கணவன்-மனைவி நினைவில் கொள்ள வேண்டும்.

படிக்க: குழந்தை கவிதைகள்

பாராட்டுங்கள்

திருமண வாழ்வு என்பது ஒன்று இரண்டு நாட்களுடம் விடியும் விழா கிடையாது. வாழ்நாள் முழுவதும் நம்முடன் வரும் பந்தம். ஆக இந்த உறவு நல்ல படியாக நிலைத்து இருக்க எல்லா வகையிலும் கண்ணும் கருத்துமாக இருப்பது அவசியம்.கணவன் வீட்டிலோ அல்லது அலுவலகத்திலோ ஏதாவது சிறப்பாக செய்தால் மனைவி மனம் திறந்து பாராட்ட வேண்டும். அதேபோல மனைவி செய்யும் சிறப்பான காரியங்களை ,கணவன் மனதார பாராட்ட வேண்டும். இது மாதிரியான அன்பும், பாராட்டுகளும் மனநிறைவைக் கொடுக்கும். வாழ்நாள் முழுவதும் விரிசலில்லா பந்தமாகத் தொடர வாய்ப்பும் அமையும்.

பயணங்கள் செய்யுங்கள்

இந்த வாழ்க்கையை ரசித்து வாழ்வதற்கு தானே? எப்போதும் சதா வேலை வேலை என்று ஓடிக்கொண்டே இருக்காமல், அவ்வப்போது சில நாட்களை ஒதுக்கி வையுங்கள். உங்களுக்குப் பிடித்த சுற்றுலா தளம், சினிமா அல்லது உறவினர் வீடு என்று எங்காவது மகிழ்ச்சியாகச் சென்று வாருங்கள். இது உங்களுக்கு நிறைவான புத்துணர்ச்சியையும் ஆனந்தத்தையும் தரும். உறவு நிலையும் மேம்படும்.

இதுதவிர மேலும் என்ன விஷயங்களை கடைப்பிடிக்கலாம்?

1.இருவரும் ஒருவரை ஒருவர் எந்த சூழ்நிலையிலும் மற்றவர்களிடம் விட்டுக் கொடுக்காமல் பேசி பழகுங்கள்.

2.வரவு செலவு கணக்குகளைச் சேர்ந்து திட்டமிடுங்கள்.

3.அவ்வப்போது பரிசுப் பொருள்கள் பரிமாறி மகிழுங்கள்.

4.விடுமுறை நாட்களில் இருவரும் பிடித்த உணவுகளைச் சேர்த்துச் சமைத்துச் சாப்பிட்டு மகிழுங்கள்.

5.சின்ன சின்ன சண்டைகளை எல்லாம் அன்றோடு மறந்து விடுங்கள். குப்பை மாதிரி சேர்த்து வைக்க வேண்டாம்.

6.நல்ல தம்பதியாக இருந்தால் மட்டுமே நல்ல பெற்றோர்கள் ஆகவும் இருக்க முடியும் என்பதை நினைவில் கொள்ளுங்கள்.

7.இருவரும் ஒருவரை ஒருவர் மதித்து நடக்கப் பழகிக் கொள்ளுங்கள்.

8.கணவன் மனைவி என்று இருவரில் யார் சாதனை புரிந்தாலும் மனதார அதை ஏற்று மதிப்பளியுங்கள்.

இந்த பதிவின் மூலம் கணவன் மனைவி எந்தெந்த வழிகளில் ஒற்றுமையாக இருக்கலாம் அவர்களின் உறவு மேம்பட என்னென்ன வழிகளைப் பின்பற்றலாம் என்று அனைத்தையும் அறிந்திருப்பீர்கள் என்று நம்புகிறோம். இந்த குறிப்புகளைப் பயன்படுத்தி உங்கள் திருமண வாழ்வை எப்போதுமே வாசம் வீசும் மலராகப் போற்றிப் பாதுகாத்துக் கொள்ளுங்கள்.

 

ஒரு தாயாக மற்ற தாய்மார்களுக்கு, வார்த்தைகள் அல்லது படங்கள் மூலமாக உங்களது அனுபவத்தைப் பகிர்ந்து கொள்ள நினைக்கிறீர்களா? தாய்மார்களை இணைக்கும் குழுவோடு சேர இங்கே கிளிக் செய்யுங்கள். நாங்கள் உங்களைத் தொடர்பு கொள்கிறோம்.

null

null