குழந்தையின்மை ஏற்பட காரணம் என்ன? மருத்துவம் என்ன?

குழந்தையின்மை ஏற்பட காரணம் என்ன? மருத்துவம் என்ன?

இன்று ஆண் பெண் என்று பாகுபாடு இல்லாமல் பெரும்பாலானோருக்குக் குழந்தைப் பேறு பெற முடியாமல் குழந்தையின்மை ஏற்படுகிறது. இந்த குழந்தையில்லாமைக்கான காரணங்கள் பல உள்ளன. எனினும் அதற்காகக் கவலை கொள்ள வேண்டாம்.

 

இன்று இந்த பிரச்சனையை நிவர்த்தி செய்ய பல்வேறு மருத்துவச் சிகிச்சைகள் வந்து விட்டன.அவற்றைச் சரியாகப் புரிந்து கொண்டு தேவையான சிகிச்சையைச் சரியாக எடுத்துக் கொண்டால் நீங்கள் எதிர்பார்த்த பலனை விரைவில் பெற இயலும்.

 

குழந்தையின்மை என்றால் என்ன?

பெரும்பாலான திருமணமான தம்பதிகள் தங்கள் வாழ்க்கையில் ஏதாவது ஒரு கட்டத்தில் குழந்தை பெற்றுக் கொள்ள நினைப்பார்கள். எனினும் இதில் சிலருக்கு இயற்கையாகக் கருவுறுவதில் பல சிக்கல்கள் ஏற்படக் கூடும். இதனால் அவர்கள் எதிர்பார்த்துக் காத்திருந்த குழந்தை பாக்கியம் கிட்டாமல் தள்ளிப் போகும். இதனால் அவர்கள் மன அழுத்தம் அடைகின்றனர். இதற்கு வயதோ அல்லது அவர்களது உடல் நிலையோ காரணமாக இருக்கலாம்.

 

அத்தகைய சூழலில் அவர்கள் மருத்துவ உதவியை நாடுவது இயல்பே.இளம் வயதினர்களுக்கு விரைவாகவே குழந்தை பெரும் வாய்ப்பு ஏற்படுகிறது. சிகிச்சை முடிவில் அவர்களுக்கு கர்ப்பம் தரித்ததற்கான அறிகுறிகளும் தென்படும். எனினும் சற்று வயது தாண்டிய தம்பதிகள் முயன்று குழந்தையின்மைக்கான காரணத்தை புரிந்து காெள்ள வேண்டும். இவர்கள் மனம் தளராமல் சிகிச்சைகள் எடுத்தால் மட்டுமே குழந்தைப் பேறு கிடைக்க வாய்ப்பு கூடி வரும்.

 

குழந்தையின்மைக்கான காரணங்கள் என்ன?

 

குழந்தையின்மைக்கு பல்வேறு விதமான காரணங்கள் இருக்கின்றன. அவற்றில் சில என்னவென்று தெரிந்து கொள்ளலாம்.

 

சீரற்ற மாதவிடாய்

 

பெண்களுக்கு மாதவிடாய் சரியான நேரத்தில் அல்லது கால இடைவேளையில் ஏற்படாமல் இருப்பது ஒரு முக்கியக் காரணம். பொதுவாகப் பெண்களுக்கு 21 நாள் முதல் 35 நாட்களுக்குள் மாதவிடாய் ஏற்படுவதுண்டு. இந்த சுழற்சியானது அந்தப் பெண்ணின் உடலில் சரியான வகையில் கருமுட்டை உற்பத்தி நடைபெறுகிறது என்பதைக் காட்டுகிறது. ஆனால் ஒரு பெண்ணின் மாதவிடாய் காலம் 35 நாட்களுக்கு மேல் தாண்டி வந்தாலும், ஒழுங்கற்ற முறையில் வந்தாலும் அவள் சுலபமான வழியில் கருவுறுவதில் பிரச்சனை ஏற்படக் கூடும்.

 

சினைப்பைக் கட்டிகள்

 

பெண்களுக்கு சினைப்பையில் கட்டிகள் இருக்கும் பட்சத்தில் கருவுறாமை ஏற்படுகிறது. இதற்கு உரிய வைத்தியங்களை மேற்கொள்ள வேண்டும்.

 

பெண்களுக்கு வயது 35க்கு மேலானால்

பெண்களுக்கு வயது 35க்கு மேல் ஆகிவிட்டது எனில் அவள் எளிதாகக் கருவுறுவதில் பிரச்சனை ஏற்படலாம். இதன் காரணமாக அவள் உடலில் உற்பத்தியாகும் கரு முட்டையின் எண்ணிக்கை அதிக அளவு குறைந்திருக்கும். மேலும் வயது அதிகம் ஆகிவிட்டக் காரணத்தால் முட்டையின் தரமும் குறையக் கூடும். இதனால் கருவுறும் வாய்ப்பும் காலப் போக்கில் குறைகிறது.

 

பால்வினை நோய்கள்

 

பால்வினை நோய்கள் தாக்கி இருந்தாலும் ஃபலோப்பியன் குழாய்கள் (கருமுட்டைக் குழாய்கள்) பாதிக்கப்பட்டிருக்கக் கூடும். இந்த குழாய்கள் நல்ல ஆரோக்கியமான நிலையில் இருந்தால் மட்டுமே இயற்கையாக ஒரு பெண் எளிதாகக் கருவுற முடியும். மேலும் அப்போது தான் ஆணின் விந்தணு எளிதாக பெண்ணின் கருமுட்டையைச் சென்றடைய முடியும். இதனாலே கருவுறுதல் சாத்தியமாகும். அதனால் இத்தகைய பிரச்சனை இருந்தால் விரைவாக மருத்துவரை அணுகுவது நல்லது. அவரின் ஆலோசனைகளை தொடர்ச்சியாக பின் பற்ற வேண்டும்.

 

ஆண்களுக்கு விந்தணு குறைபாடு

குழந்தையின்மை பிரச்சனை ஏற்படுவதற்கு ஆண்களுக்கு விந்தணு எண்ணிக்கையில் குறைபாடு இருத்தல் மிக முக்கிய காரணமாகும். விந்தணு இயக்கம் சரியாக இல்லாத போதும் கருவுறாமை ஏற்படும். இது தவிரக் கருவுறாமைக்கான வேறு குறைபாடுகள் இருந்தாலும் சரியாகக் கருத்தரிக்க முடியாமல் போகலாம்.

 

மரபணு கோளாறு

மரபணு ரீதியான கோளாறு தம்பதிகளில் ஆண் மற்றும் பெண்ணில் யாருக்காவது நிலவி வந்தாலும் குழந்தையின்மை ஏற்பட அதிக வாய்ப்பு உள்ளது.இந்த விஷயத்தில் உரிய மருத்துவச் சிகிச்சைகளை மேற்கொண்டு முயற்சித்து பார்க்கலாம்.எனினும்
இதன் வெற்றி வாய்ப்பை உறுதியாக சொல்ல முடியாது.

 

குழந்தையின்மைக்கான அறிகுறிகள்

 

குழந்தையின்மையின் ஒரு முக்கிய அறிகுறி என்னவென்றால், கருத்தரிக்காமல் இருப்பது. இதைத் தவிர வேறு எந்த குறிப்பிட்ட அறிகுறிகளும் இருக்க முடியாது, சில தருணங்களில் பெண்களுக்கு ஒழுங்காக மாதவிடாய் ஏற்படாமல் இருக்கலாம். ஆண்களில் ஹோர்மோன் பிரச்சனைகள் ஏற்படலாம். இதனால் அவர்களின் பாலியல் செயல்பாடுகளில் மாற்றங்கள் ஏற்படக் கூடும்.

 

எப்போது மருத்துவரை அணுகுவது?

உங்களுக்கு இருக்கும் குழந்தையின்மை பிரச்சனையை நீங்கள் புரிந்து கொண்டவுடன் மருத்துவரைச் சரியான நேரத்தில் அணுகி உங்கள் பிரச்சனைக்கு ஒரு நல்ல தீர்வு பெற முயல்வது முக்கியம். தம்பதிகள் இந்த விசயத்தில் தயக்கம் காட்டக்கூடாது. காலம் தாமதிப்பதால் இந்த சிக்கல் அதிகரிக்க மட்டுமே செய்யும். இதை உணர்ந்து நடந்தால் எதிர்காலத்தில் மன உளைச்சல் அடைய அவசியம் ஏற்படாது. நீங்கள் எப்போது மருத்துவரை அணுக வேண்டும் என்பதற்கு இங்கே சில குறிப்புகளைத் தந்து உள்ளோம்.

 

  • ஆண் / பெண் வயது 35 முதல் 40 இருந்தால் மருத்துவரை அணுகவும்.
  • உங்கள் வயது 40க்கு மேல் இருந்தால் சரியான ஆலோசனையை உடனே மருத்துவரிடம் இருந்து பெறவும்.
  • மாதவிடாய் சீராக வரவில்லை என்றாலோ அல்லது மாதவிடாயே ஏற்படவில்லை என்றாலோ மருத்துவரை அணுகவும்.
  • மாதவிடாய் அதிக வலியோடு ஏற்பட்டால், மருத்துவரை அணுகவும்.
  • கருவுறுவதில் பிரச்சனைகள் இருப்பதை நீங்கள் உணர்ந்தால் மருத்துவரை அணுகவும்.
  • பால்வினை நோய் இருக்கும் அறிகுறியை நீங்கள் உணர்ந்தால் உடனடியாக மருத்துவரை அணுகவும்.
  • அதிக அளவில் கருச் சிதைவு ஏற்பட்டிருந்தால் மருத்துவரை அணுகுவது நல்லது.
  • ஏதாவது புற்றுநோய்க்கான சிகிச்சை நீங்கள் எடுத்திருந்தால் மருத்துவரின் ஆலோசனையைப் பெறுவது நல்லது.
  • ஆண்களுக்குக் குறைவான விந்தணு வெளியேற்றம் அல்லது விந்தணு பிரச்சனை இருந்தால் மருத்துவ ஆலோசனைப் பெற்றுக் கொள்வது நல்லது.
  • இதையும் படிங்க: கர்ப்பம் வேண்டாம்! செக்ஸ் வேண்டும்!
  • விதைப்பையில் வீக்கம் அல்லது புண் இருந்தால் மருத்துவச் சிகிச்சை எடுத்துக் கொள்ள வேண்டும்.
  • உங்கள் குடும்பத்தினரில் யாருக்காவது மரபு வழி கருவுறாமைக்கான பிரச்சனை இருந்தால் மருத்துவச் சிகிச்சை எடுத்துக் கொள்வது நல்லது.

 

குழந்தையின்மைக்கான சிகிச்சை முறைகள்

 

இன்றைய தொழில்நுட்ப வளர்ச்சி மருத்துவத் துறையில் பல நல்ல மாற்றங்கள் ஏற்படுத்தி உள்ளன. இதனால் தீர்க்க முடியாமல் சவாலாக இருந்த பல நோய்களையும் இன்று எளிதாகக் குணமடையச் செய்ய முடிகிறது. இந்த வகையில், கருவுறாமைக்கான காரணங்களைச் சரியாகக் கண்டறிந்து, அதற்கான சரியான சிகிச்சை முறையையும் தேர்ந்தெடுத்து உங்கள் பிரச்சனையைச் சரி செய்து கொள்ள முடியும். இந்த வகையில் பல சிகிச்சை முறைகள் இன்று வழக்கத்தில் உள்ளன. இவை ஆண் மற்றும் பெண் என்று இரு பாலருக்கும் அவர்களது தேவைக்கேற்ப மாற்றி அமைக்கப்பட்டுள்ளன. நீங்கள் தெரிந்து கொள்ள, இங்கே சில கருவுறாமைக்கான சிகிச்சை முறைகள் கொடுக்கப்பட்டுள்ளன.

 

ட்ரான்ஸ்வஜினல் அல்ட்ராசவுண்ட்

இந்த சிகிச்சை முறை கருப்பை, குழாய்கள் மற்றும் கருப்பையின் மற்ற பகுதிகளைப் பற்றி நன்கு தெரிந்து கொள்ள உதவுகிறது. அல்ட்ரசவுண்ட் ஃபைபிராய்ட்ஸ் மற்றும் பாலிப்ஸ், ஃபலோப்பியன் குழாய் அடைப்பு மற்றும் கருப்பை நீர்க்கட்டிகள் உள்ளிட்ட பல வற்றைப் பற்றித் தெரிந்து கொள்ள உதவுகிறது. மேலும் இந்த சிகிச்சையால் மருத்துவரால் பெண்ணின் கரு முட்டைகளின் எண்ணிக்கையைப் பற்றித் தெரிந்து கொள்ள முடிகிறது. இதனால் கருவுறுவதற்கான சாத்திய கூறு எந்த அளவிற்கு இருக்கிறது என்று தெரிந்து கொள்ள முடிகிறது.

 

முட்டை வளர்ச்சியை அதிகரிப்பது மற்றும் அண்டவிடுப்பு ஏற்பட உதவுவது

 

கருப்பையில் இருக்கும் முட்டையின் எண்ணிக்கையை அதிகரிக்கச் சிகிச்சை உள்ளது. இதனால் அண்டவிடுப்பும் சீராக நடை பெற வாய்ப்பு ஏற்படுகிறது. இதற்கு சில குறிப்பிட்ட மாதங்கள் வரை மருத்துவர் பரிந்துரைக்கும் மருந்துகளை எடுத்துக் கொள்ள வேண்டும். இவ்வாறு செய்வதால் கருவுறுதலில் நிலவி வந்து சிக்கல் தீர்க்கப்பட்டு விடுகிறது. அதனால் குழந்தைப் பேறு ஏற்பட நிறையச் சாத்தியங்கள் ஏற்படுகின்றன.

 

கருவூட்டல் அல்லது விந்தணு செலுத்துதல்

 

இந்த சிகிச்சை முறை ஐயுஐ(IUI) என்றும் அழைக்கப் படுகிறது. இந்த சிகிச்சை முறையில் விந்தணு கருப்பையினுள் செலுத்தத் தயார் செய்யப்படுகிறது. இதனால் அதிக அளவு விந்தணுக்கள் கருமுட்டையைச் சென்றடைய உதவியாக இந்த சிகிச்சை முறை இருக்கிறது. அதனால் கருவுறாமை பிரச்சனை நிவர்த்தி செய்யப்படுகிறது.

 

இன்விட்ரோ ஃபெர்டிலைஷேசன்(IVF)

 

இந்த IVF சிகிச்சை முறையில் கரு முட்டைகள் சேகரிக்கப்பட்டு உடலுக்கு வெளியே ஆய்வகத்தில் கருவகத்தட்டில் வைக்கப்பட்டு விந்தணுவுடன் சேர்க்கப்பட்டுக் கருவுறச் செய்யப்படுகிறது. இந்த சிகிச்சை முறையின் மூலம் முதன் முதலில் 1978ல் இங்கிலாந்தில் குழந்தை பிறந்தது. அதன் பின் ஒன்றன்பின் ஒன்றாகப் பல தம்பதிகள் இந்த முறையைப் பின்பற்றத் தொடங்கினர். அதற்குப் பிறகு இந்த சிகிச்சை முறை மேலும் பிரபலமாகி விட்டது.இப்போது அதிக மக்கள் இதனால் பயன் பெற்று வருகிறார்கள் என்பது உண்மை.

இந்த சிகிச்சை முறை மட்டுமல்லாமல் இன்னும் பல அங்கீகரிக்கப்பட்ட சிகிச்சை முறைகள் மருத்துவத் துறையில் உள்ளன. எனினும் அதில் உங்களுக்கு ஏற்ற சிகிச்சை முறை எதுவென்று உங்கள் மருத்துவரின் ஆலோசனைப் பெற்று அதன் படி முயற்சி செய்து விரைவாகக் கருவுற்று பலன் பெறுங்கள்.

 

இதையும் படிக்க: பிறந்த குழந்தைகளின் இறப்பைத் தடுக்க… தாய் கட்டாயமாக செய்ய வேண்டிய 2 டெக்னிக்

 

ஒரு தாயாக மற்ற தாய்மார்களுக்கு, வார்த்தைகள் அல்லது படங்கள் மூலமாக உங்களது அனுபவத்தைப் பகிர்ந்து கொள்ள நினைக்கிறீர்களா?  தாய்மார்களை இணைக்கும் குழுவோடு சேர இங்கே கிளிக் செய்யுங்கள். நாங்கள் உங்களைத் தொடர்பு கொள்கிறோம்.

null

null