பள்ளி செல்லும் குழந்தைகளுக்கு சத்தான 'லஞ்சு பாக்ஸ்' ரெசிபிகள்! (2 to 5 வயது)

பள்ளி செல்லும் குழந்தைகளுக்கு சத்தான 'லஞ்சு பாக்ஸ்' ரெசிபிகள்! (2 to 5 வயது)

குழந்தைகளுக்கு எப்போதும் ஒரே வகையான சாப்பாடு செய்து கொடுத்தால் சாப்பிட மாட்டார்கள். அதிலும் லஞ்சுக்குக் கொடுக்கும் ரெசிப்பிகளில் மிகவும் கவனமாக இருக்க வேண்டும். குழந்தைகளுக்கு பிடிக்கவில்லை என்றால் அப்படியே டிபன் பாக்ஸ் வீட்டிற்குத் திரும்பி வந்து விடும். மதிய வேளையில் பள்ளியில் குழந்தைகள் சாப்பிடும் உணவுகள் மிகவும் முக்கியமானது. அதனால் சரியாகச் சாப்பிடவில்லை என்றால் அவர்களால் ஒழுங்காகப் பாடத்தைக் கவனிக்க முடியாது. மேலும் அவர்களுக்குப் பல்வேறு ஊட்டச்சத்துக் குறைபாடுகள் ஏற்படும். (Lunch box recipes in tamil)

இந்தப் பிரச்சினைகள் எல்லாம் வராமல் இருக்க என்ன செய்யலாம் என்று யோசிக்கின்றீர்களா? கவலையை விடுங்கள்! குழந்தைகளுக்குக் கொடுக்க ஏற்ற மிகவும் ஆரோக்கியமான மற்றும் ருசியான லஞ்சு பாக்ஸ் ரெசிபிகளை நாங்கள் உங்களுக்காக வழங்கியுள்ளோம்! அவை என்னவென்று பார்க்கலாமா?

1.கொத்தமல்லி ரைஸ்

தேவையான பொருட்கள்:

  • கொத்தமல்லி தழை-1 கட்டு
  • வேகவைத்து வடித்த சாதம் -1 கப்
  • எண்ணெய் – தேவையான அளவு
  • கடுகு -1/2 ஸ்பூன்
  • சீரகம் – 1/2 ஸ்பூன்
  • கடலைப் பருப்பு -1/2ஸ்பூன்
  • உளுத்தம் பருப்பு -1/2 ஸ்பூன்
  • கறிவேப்பிலை -சிறிது அளவு
  • பெரிய வெங்காயம்- 1
  • பச்சை மிளகாய் -3
  • பூண்டு – 3 பல்
  • இஞ்சி -1 சிறிது அளவு
  • உப்பு -தேவையான அளவு

கொத்தமல்லி சாதம் செய்வது எப்படி?

1.முதலில் கொத்தமல்லி இலைகளைக் தண்ணீரில் நன்கு சுத்தம் செய்துக் கிள்ளி எடுத்துக் கொள்ளவும்.

2.பிறகு பச்சை மிளகாய், இஞ்சி மற்றும் பூண்டு பற்களை மிக்ஸியல் போட்டு சிறிது தண்ணீர் சேர்த்து விழுதாக அரைத்துக் கொள்ளவும்.

3.வாணலியை அடுப்பில் ஏற்றி சூடானதும் எண்ணெய் ஊற்றவும். பின் இதில் கடுகு,சீரகம்,கறிவேப்பிலை, உளுத்தம் பருப்பு, கடலைப் பருப்பு ஆகிய பொருட்களைச் சேர்த்து வதக்கவும்.

4.கடுகு பொரிந்ததும் நறுக்கி வைத்துள்ள வெங்காயத்தை இத்துடன் சேர்த்து நன்கு வதக்கவும்.

5.வெங்காயம் பொன்னிறமாக மாறியதும் அரைத்து வைத்துள்ள விழுதை இத்துடன் சேர்த்து கிளறி, நன்கு வதக்கவும்.

6.பிறகு ஏற்கனவே தயாராக வைத்துள்ள வேக வைத்த சாதத்தினை இதனுடன் சேர்த்துக் கிளறி இறக்கவும். தேவையான அளவு உப்பு சேர்த்துக் கொள்ளவும்.

7.சுவை மற்றும் ஆரோக்கியமான கொத்தமல்லி சாதம் தயாராகிவிட்டது.

இதையும் படிங்க: 10 மாத குழந்தைக்கான உணவு அட்டவணை

2.முருங்கைப் பொடி இட்லி பிரை

தேவையான பொருட்கள்

  • இட்லி -7 (துண்டுகளாகக் கத்தியில் நறுக்கிக் கொள்ளவும்)
  • எண்ணெய் -தேவையான அளவு
  • கடுகு -1/2 ஸ்பூன்
  • சீரகம் – 1/2 ஸ்பூன்
  • கடலை பருப்பு -1/2ஸ்பூன்
  • உளுத்தம் பருப்பு -1/2 ஸ்பூன்
  • கறிவேப்பிலை -சிறிது அளவு
  • பெரிய வெங்காயம் – 2 (பொடியாக நறுக்கியது)

முருங்கை பொடி தயாரிக்கத் தேவையான பொருட்கள்

  • முருங்கைக்கீரை -1 கப்(கழுவி,ஆய்ந்து,காய வைத்தது)
  • முருங்கைக்கீரை சூப் & நன்மைகள் என்ன?
  • கடலைப்பருப்பு -1 கப்
  • உளுத்தம்பருப்பு -1 கப்
  • கறுப்பு எள் – 1 கப்
  • வர மிளகாய் -5
  • உப்பு -தேவையான அளவு
  • பெருங்காயத்தூள் -தேவையான அளவு.

முருங்கைப் பொடி இட்லி பிரை செய்வது எப்படி?

1.வெறும் கடாயில் பொடி தயாரிக்கத் தேவையானவை பகுதியில் கொடுத்துள்ள பொருட்கள் தனித் தனியாக போட்டு வறுத்து எடுத்துக் கொள்ளவும். பின் இவற்றை ஆற விடவும்.

2.ஆறிய பிறகு மிக்ஸியில் அனைத்தையும் ஒன்றாக சேர்த்துப் பொடியாக அரைத்துக் கொள்ளவும். இதைக் காற்றுப்புகாத டப்பாவில் போட்டு வைத்துத் தேவைப்படும் போது பயன்படுத்திக் கொள்ளவும்.

3.தற்போது கடாயில் எண்ணெய் சேர்க்கவும். எண்ணெய் காய்ந்த பின் கடுகு, சீரகம், கடலைப் பருப்பு, உளுத்தம் பருப்பு, கறிவேப்பிலை முதலான பொருட்களைச் சேர்த்து வதக்கவும்.

4.பிறகு அறிந்து வைத்துள்ள வெங்காயத்தைச் சேர்த்து பொன் நிறமாகும் வரை வதக்கவும்.

5.பின் இட்லி துண்டுகள் மற்றும் தேவையான அளவு முருங்கை பொடி சேர்த்து நன்கு புரட்டவும்.

6.இத்தோடு தேவையான அளவு உப்பு சேர்த்து கிளறிக் கொள்ளவும்.

7.சுவையும் ஆரோக்கியும் நிறைந்த முருங்கை பொடி இட்லி பிரை தயார். (Lunch box recipes in Tamil)

 

3.கொண்டைக்கடலை புலாவ்/சென்னா புலாவ்

தேவையான பொருட்கள்:

  • பாஸ்மதி அரிசி -1கப்
  • தண்ணீர் -2கப்
  • கொண்டைக் கடலை -1/2 கப்
  • பெரிய வெங்காயம் -2
  • கறிவேப்பிலை -சிறிது அளவு
  • தக்காளி -1
  • பச்சை மிளகாய்/கொடை மிளகாய் -3
  • கரம் மசாலா -1 ஸ்பூன்
  • இஞ்சி பூண்டு விழுது -1ஸ்பூன்
  • தயிர் -1ஸ்பூன்
  • உப்பு -தேவையான அளவு
  • எண்ணெய் -தேவையான அளவு
  • சீரகம் -½ ஸ்பூன்
  • பட்டை-1
  • கிராம்பு-2
  • ஏலக்காய் -1
  • பிரிஞ்சி இலை -1

கொண்டைக்கடலை புலாவ் செய்வது எப்படி?

1.கொண்டைக் கடலையை இரவில் தூங்கப் போகும் போதே ஊற வையுங்கள்(7-8 மணி நேரம் வரை). காலையில் ஊற வைத்த கொண்டைக் கடலையைக் குக்கரில் சேர்த்து, தண்ணீர் ஊற்றவும்.

2.பின் 5-6 விசில்கள் விட்டு இறக்கவும். பிறகு விசில் அடங்கியவுடன் கொண்டைக் கடலையை வடித்து எடுத்து வைத்துக் கொள்ளவும்.

3.பிறகு குக்கரை அடுப்பில் ஏற்றி, சூடானதும் எண்ணெய்யை ஊற்றவும்.

4.எண்ணெய் காய்ந்த பிறகு சீரகம், பட்டை, கிராம்பு, ஏலம், பிரிஞ்சி இலை முதலான பொருட்களைச் சேர்த்து வதக்கவும்.

5.பிறகு நறுக்கிய வெங்காயத்தைச் சேர்த்து பொன்னிறமாக மாறும் வரை மிதமான தீயில் வதக்கவும்.

6.பின் இஞ்சி பூண்டு விழுதைச் சேர்த்து பச்சை வாசம் போகும் வரை நன்கு வதக்கவும்.

7.அதன் பின் நறுக்கி வைத்துள்ள பச்சை மிளகாய் மற்றும் தக்காளி சேர்த்து
நன்கு வதக்கவும். பின் இத்தோடு தயிரைச் சேர்க்கவும்.

8.பிறகு வேக வைத்துள்ள கொண்டைக் கடலை சேர்த்து கொள்ளவும். பின் கரம் மசாலா சேர்த்து வதக்கவும். சிறிது கொத்தமல்லி மற்றும் புதினா தழைச் சேர்த்துக் கொள்ளவும்.

9.அனைத்தும் வதங்கிய பிறகு, கழுவி ஊற வைத்துள்ள பாஸ்மதி அரிசியைச் சேர்க்கவும். (பாஸ்மதி அரிசி இல்லையென்றால் சாதாரண அரிசியிலும் இதனை ட்ரை பண்ணலாம்).

10.தேவையான அளவு தண்ணீர் ஊற்றி, குக்கரை மூடி 2 விசில்கள் வர விடவும். பின் இறக்கவும். விசில் அடங்கியவுடன் குக்கரை திறந்து மெல்ல கிளறி விடவும்.

11.சத்து மற்றும் சுவையான கொண்டைக் கடலை புலாவ் தயாராகி விட்டது.

இதப் படிங்க: சமையல் குறிப்புகள் இங்கே

4.முட்டைகோஸ்-கேரட்- பசலைக் கீரை ஸ்டஃப்டு சப்பாத்தி

தேவையான பொருட்கள் :

  • கோதுமை மாவு – 2 கப்
  • பால் -1/2 கப்(காய்ச்சியது)
  • எண்ணெய் -தேவையான அளவு
  • உப்பு -தேவையான அளவு
  • ஸ்டஃப் செய்ய தேவையான பொருட்கள்
  • சீரகம் -½ ஸ்பூன்
  • கடுகு -½ ஸ்பூன்
  • முட்டைகோஸ் துருவல் -1/2 கப்
  • கேரட் துருவல் – 1/4 கப்
  • பசலைக் கீரை – 1கப்
  • பெரிய வெங்காயம் – 2
  • கொத்தமல்லித் தழை – சிறிதளவு
  • கரம் மசாலாத்தூள் – 1 ஸ்பூன்
  • மிளகாய்த்தூள் – 1 ஸ்பூன்

முட்டைகோஸ்-கேரட்- பசலைக் கீரை ஸ்டஃப்டு சப்பாத்தி செய்வது எப்படி?

1.வெங்காயம், கொத்தமல்லி மற்றும் பசலைக்கீரை ஆகியவற்றைப் பொடியாக அரிந்து கொள்ளவும்.

2.முன்னதாகவே கோதுமை மாவுடன் பால், உப்பு, எண்ணெய் மற்றும் தண்ணீர் சேர்த்து பிசைந்து கொள்ளவும். இதை அரை மணி நேரம் ஊற வைக்கவும். அப்போது தான் சப்பாத்தி மிருதுவாக வரும்.

3.கடாயில் எண்ணெய் ஊற்றி கடுகு,சீரகம்,பொடியாக நறுக்கிய வெங்காயம் , முட்டைகோஸ் துருவல், கேரட் துருவல் மற்றும் பசலைக் கீரை முதலியவற்றைச் சேர்த்து நன்கு வதக்கவும்.

4.இத்தோடு பொடியாக நறுக்கிய கொத்தமல்லித் தழை, மிளகாய்த்தூள், கரம் மசாலாத்தூள் ஆகியவற்றைச் சேர்த்து நன்கு வதக்க வேண்டும்.

5.பின் தேவையான அளவு உப்பு சேர்த்துக் கொள்ளவும்.

6.பிசைந்து வைத்துள்ள மாவில், கொஞ்சம் மாவை எடுத்து சற்று பெரிய சப்பாத்தியாக உருட்டவும். இதே போல சற்று சிரியதாக இன்னொரு சப்பாத்தியைத் தேய்த்துக கொள்ளவும்.

7.பெரிய சப்பாத்தின் மேல் வதக்கிய காய்கறி-கீரைக் கலவையைப் பரவலாக வைக்கவும். அதன் மீது சிறிய சப்பாத்தியை வைத்து ஓரங்களை மடித்து மூடவும்.

8.தோசைக் கல்லை அடுப்பில் ஏற்றிச் சூடானதும் தேய்த்து வைத்துள்ள சப்பாத்தியைப் போடவும். சுற்றிலும் சிறிது எண்ணெய் ஊற்றி, வேக விடவும்.

9.பின்னர் திருப்பிப் போட்டு, நன்கு வேக விடவும் .

10.தற்போது சுவையும் சத்தும் நிறைந்த முட்டைகோஸ்-கேரட்- பசலைக் கீரை
ஸ்டஃப்டு சப்பாத்தி தயார்.

5.முந்திரி அவல்

தேவையான பொருட்கள்

  • கெட்டி அவல் -1 கப்
  • தேங்காய்த்துருவல் – 1/4 கப்
  • பெரிய வெங்காயம் -2 (பொடியாக அரிந்தது)
  • பச்சை மிளகாய் -1 (பொடியாக அரிந்தது)
  • கடுகு -1/2 ஸ்பூன்
  • கடலைப்பருப்பு -1ஸ்பூன்
  • உளுத்தம் பருப்பு -1 ஸ்பூன்
  • முந்திரிப்பருப்பு -10
  • வேர்க்கடலை -1 ஸ்பூன் (வறுத்தது)
  • கறிவேப்பிலை -சிறிதளவு
  • கொத்தமல்லித்தழை -சிறிதளவு
  • மஞ்சள்தூள் -¼ ஸ்பூன்
  • எண்ணெய் -தேவையான அளவு
  • உப்பு -தேவையான அளவு

முந்திரி அவல் தயார் செய்வது எப்படி?

1.அவலை ஒரு ஐந்து ஆறு நிமிடங்கள் தண்ணீரில் ஊற வைக்கவும்.

2.பிறகு நன்கு களைந்து வடிகட்டி அவலை எடுத்து வைத்துக் கொள்ளவும்.

3.பின் கடாயை அடுப்பில் ஏற்றி எண்ணெய்யை ஊற்றவும். எண்ணெய் சூடானதும் கடுகு, கறிவேப்பிலை, கடலைப்பருப்பு, உளுத்தம்பருப்பு, முந்திரிப்பருப்பு மற்றும் வேர்க்கடலை ஆகியவற்றைச் சேர்த்துத் தாளிக்கவும்.

4.பிறகு நறுக்கி வைத்துள்ள வெங்காயம் மற்றும் பச்சை மிளகாய் சேர்த்து நன்கு வதக்கவும்.

5.வெங்காயம் பொன்னிறமாக மாறியவுடன் வடித்து எடுத்து வைத்துள்ள அவல், மஞ்சள்தூள் மற்றும் தேவையான அளவு உப்பு சேர்த்துக் கொள்ளவும்.

6.பிறகு சுவைக்கு தேங்காய்த் துருவலை இத்தோடு சேர்த்துக் கிளறவும். இறுதியாக நறுக்கி வைத்துள்ள கொத்தமல்லித்தழைகளைத் தூவி இறக்கவும்.

7.ருசியான முந்திரி அவல் தயாராகி விட்டது.

என்ன மேலே கொடுத்துள்ள அத்தனை சுவை மற்றும் சத்தான ரெசிபிகளையும் எப்படி செய்வது என்று அறிந்து கொண்டீர்களா? இனிக் களத்தில் இறங்குங்கள்! அப்புறம் என்ன? குழந்தைகள் இனி லஞ்ச் பாக்ஸில் வைக்கும் எந்த உணவையும் திருப்பி எடுத்து வர மாட்டார்கள். இன்னும் கொஞ்சம் சேர்த்து வையுங்கள் அம்மா என்று கூறப் போகிறார்கள் பாருங்கள்.

 

இதையும் படிக்க: பிரசவத்துக்கு பிறகு ஏற்படும் தொப்பையை குறைப்பது எப்படி?

 

ஒரு தாயாக மற்ற தாய்மார்களுக்கு, வார்த்தைகள் அல்லது படங்கள் மூலமாக உங்களது அனுபவத்தைப் பகிர்ந்து கொள்ள நினைக்கிறீர்களா? தாய்மார்களை இணைக்கும் குழுவோடு சேர இங்கே கிளிக் செய்யுங்கள். நாங்கள் உங்களைத் தொடர்பு கொள்கிறோம்.

null

null