12 அறுவைசிகிச்சை பிரசவத்தைப் பற்றிய கட்டுக்கதைகள் மற்றும் உண்மைகள்

12 அறுவைசிகிச்சை பிரசவத்தைப் பற்றிய கட்டுக்கதைகள் மற்றும் உண்மைகள்

அறுவைசிகிச்சை பிரசவம் ஒரு அச்சுறுத்தும் குழந்தைப் பேறு பெரும் வழி என்று ஒரு வகையிலும் அதுவே சில சிக்கலான தருணங்களில் தாய்சேய் நலன் காக்க கிடைத்த பரிசு என்றும் சொன்னால், அது மிகையாகாது.ஆனால் இது தாய்மார்களின் பல விசயங்களை ஒரு பக்கம் எளிதாக்கினாலும்,பிற்காலத்தில் சில உடல் நல பிரச்சனைகளைத் தரக் கூடும் என்று நம்பப்படுகிறது.

 

சிலர் அறுவைசிகிச்சை மூலம் குழந்தை பெரும் பெண்கள் எளிதாகக் குழந்தையைப் பெற்றுக் கொள்கிறார்கள் என்று நினைக்கிறார்கள். எனினும், சுகப் பிரசவம் கடுமையான  வலி நிறைந்தது என்றாலும்,பல விசயங்களில் அது நன்மையைத் தரக் கூடியதாக இருக்கும். ஓரிரு நாட்களுக்கு வலியைப் பொறுத்துக் கொண்டு சுகப் பிரசவ வாய்ப்பை ஏற்படுத்திக் கொண்டால் வாழ்நாள் முழுதும் தாய்மார்கள் ஆரோக்கியமாக இருக்கலாம். எனினும், அனைவருக்கும் சுகப் பிரசவம் நடக்கும் என்று சொல்ல முடியாது. ஒரு சில பெண்களுக்கு அறுவைசிகிச்சை செய்தால் மட்டுமே தாயையும் சேயையும் காப்பாற்ற முடியும் என்ற சூழல் நிலவக்கூடும். இந்த விதத்தில் அறுவைசிகிச்சை பிரசவம் ஒரு வரப்பிரசாதமாக சில பெண்களுக்கு அமைந்துள்ளது.

 

12 அறுவைசிகிச்சை பிரசவத்தைப் பற்றிய தவறான கருத்துக்கள் (12 myths about C Section Delivery in Tamil)

கருவுற்றிருக்கும் பெண்கள் சுகப் பிரசவமா அல்லது அறுவைசிகிச்சை பிரசவமா என்று முடிவெடுக்கும் முன், சில விசயங்களைத் தெரிந்து கொள்வது நல்லது.மேலும் அறுவை சிகிச்சை பிரசவம் பெற்ற பெண்கள் இந்த வகை பிரசவம் குறித்து நிலவும் தவறான வதந்திகளை நம்பக் கூடாது.உங்களுக்காக இங்கே சில அறுவைசிகிச்சை பிரசவத்தைப் பற்றிய உண்மை நிலவரங்கள்.

 

1.வலி இல்லாதது (Painless)

இது மிகவும் தவறான ஒரு எண்ணம். ஒரு தாய் தன் குழந்தையை சுகப்பிரசவம் அல்லது அறுவைசிகிச்சை என்ற இரு வழியில் எந்த வகையில் பிரசவித்தாலும் அந்த முறை வலி நிறைந்ததுதான். அறுவைசிகிச்சை செய்வதற்காக உங்களுக்கு மயக்க மருந்து தரப்பட்டிருக்கலாம், அதனால் உங்களுக்கு அந்த நேரத்தில் வலி தெரியாமல் நீங்கள் குழந்தையைப் பெற்றிருக்கலாம்.அதற்குப் பிறகு வலி முற்றிலுமாக குறைய சுமார் அரை மாத காலமாே இல்லை சில சமயங்களில் அதற்கும் கூடுதலாகவோ  தேவைப்படுகிறது. எனினும், அதன் பின் நீங்கள் மிக மிகக் கவனமாக இல்லை என்றால், உங்கள் வாழ்நாள் முழுவதும் நீங்கள் இந்த அறுவைசிகிச்சையின் தாக்கத்தின் வலியை உணர்ந்து கொண்டே இருக்கும் சூழல் ஏற்படலாம்.

 

2. அறுவைசிகிச்சை குழந்தை பிறப்பு பாதுகாப்பற்றது (Cesarean is unsafe)

வயிற்றைக் கிழித்து குழந்தையை வெளியே எடுப்பது சற்று சவால் நிறைந்த விசயமாகும்.இந்த வகை பிரசவம் ஒரு மிகப் பெரிய ரண சிகிச்சை என்றால் மிகையில்லை.இந்த சிகிச்சையின் போது இரண்டு உயிர்கள் காக்கப்பட வேண்டிய நெருக்கடி உள்ளது. இதில் சிறு பிழை ஏற்பட்டாலும் அதன் விளைவு பெரியதாக இருக்கும்.எனினும், தற்போது வளர்ந்து வரும் தொழில்நுட்பம் பாதுகாப்பான அறுவைசிகிச்சையை உறுதிப்படுத்துகிறது. சமீபத்திய புள்ளி விவரப்படி அதிக அளவு பிரசவம் வெற்றி பெற்று,தாய் மற்றும் சேய் நலமுடன் மீட்கப்பட்டு உள்ளனர். அதனால் இவ்வகை பிரசவத்தை முற்றிலும் பாதுகாப்பற்றது என்று கூறி விட முடியாது.கூடுதல் கவனம் தேவை என்பதை மட்டும் மறுப்பதற்கில்லை.

 

3. முதல் குழந்தை அறுவைசிகிச்சை மூலம் பிறந்தால் அடுத்த குழந்தையும் அப்படியே. (After cesarean,women cannot opt for normal delivery )

உங்கள் முதல் குழந்தை அறுவைசிகிச்சை மூலம் பிறந்தால் அடுத்துப் பிறக்கும் குழந்தையும் அப்படியே பிறக்க வேண்டும் என்ற தவறான கருத்து இருந்தாலும், சுகப் பிரசவமோ அல்லது அறுவைசிகிச்சை பிரசவமோ, அது அந்தப் பெண்ணின் ஆரோக்கியம் மற்றும் பிரசவ வலியைத் தாங்கிக் கொள்ளும் திறனைப் பொறுத்தே உள்ளது.அறுவை

சிகிச்சை பிரசவம் மூலம் பிரசவித்த தாய்மார்கள் இரண்டாம் முறை கர்ப்பம் அடையும் போது மருத்துவர்களின் முழுமையான பரிந்துரையோடு  தாராளமாக சுகப்பிரசவத்திற்கான முயற்சியை மேற்கொள்ளலாம்.

 

4.தாய்ப்பால் தர முடியாது (Cannot breastfeed)

இதுவும் தவறான கோட்பாடாகவே உள்ளது. சிலர் அறுவைசிகிச்சை மூலம் குழந்தை பெற்றுக் கொண்டால் தாய்ப்பால் கொடுக்க முடியாது என்று எண்ணுகிறார்கள். ஆனால் அப்படி இல்லை. உங்கள் உடலில் சில சிரமங்கள் அறுவை சிகிச்சை முடிந்த பின் இருந்தாலும், நாளடைவில் நீங்கள் குணமாகி விடுவீர்கள். மேலும் உதவியாளரின் உதவியோடு உங்கள் குழந்தைக்கு நீங்கள் தாய்ப்பால் கொடுக்கலாம்.அதுவும் குறிப்பாக வால்பகுதித் தண்டுவடத்தில் மயக்கமருந்து செலுத்தி அறுவை சிகிச்சை செய்யப்பட்ட தாய்மார்கள் பிரசவத்திற்குப் பின் உடனேயே தாய்ப்பால் கொடுக்கலாம் என்பது குறிப்பிடத்தக்கது.

 

5. பல வாரங்களுக்கு நடக்கவோ வாகனம் ஓட்டவோ முடியாது (Cannot drive or walk for weeks)

நிச்சயம் இது ஒரு வலி தரக்கூடிய செயலாகும். தையல் போட்ட இடத்தில் அழுத்தம் ஏற்பட்டால் அது வலியை உண்டாக்கக்கூடும். அதனால் நீங்கள் முழுமையாகக் குணமடையும் வரை போதிய ஓய்வு தேவை. எனினும் உங்கள் உடலை வருத்திக் கொள்ளாமல் நடக்கவோ அல்லது வாகனம் ஓட்டவோ முடியும் என்றால் நீங்கள் அதைச் செய்யலாம்.

 

6. உங்கள் குழந்தையோடு நெருக்கமாக இருக்க முடியாது (Cannot be closer with your baby)

இதுவும் தவறான கருத்தே. அறுவைசிகிச்சையோ சுக பிரசவமோ, உங்கள் குழந்தையிடம் உங்களுக்கு இருக்கும் நெருக்கம் மற்றும் அன்பு என்றும் மாறாது. அதனால் இத்தகைய வதந்திகளை எண்ணி நீங்கள் ஐயப்பட வேண்டாம்.

 

7. அறுவைசிகிச்சைக்குப் பிறகு இரத்தப்போக்கு இருக்காது (No vaginal bleed after cesarean)

இதுவும் தவறான கருத்தே. குழந்தை பிறந்த பின், அது எந்த விதமான பிரசவமாக இருந்தாலும் கருப்பை தன்னைத்தானே குணப்படுத்திக் கொள்ள மற்றும் மீண்டும் சராசரி அளவிற்கு வர இரத்தப்போக்கை ஏற்படுத்தும். அப்படி ஏற்படுவதே ஆரோக்கியமாகும்.

 

8. பல நாட்களுக்குப் படுக்கையிலேயே இருக்க வேண்டும் (Be bedridden for long days)

இதுவும் ஒரு தவறான கருத்தே. குணமடையும் காலம் அந்தப் பெண்ணின் ஆரோக்கியம் மற்றும் சுற்றுச்சூழலைப் பொறுத்தே இருக்கும். அதனால் உங்களுக்குச் சரியான கவனிப்பு, சத்தான உணவு மற்றும் உதவி செய்ய ஆட்கள் இருந்தால் நீங்கள் விரைவாகக் குணமடைந்து சராசரி வாழ்க்கைக்கு வேகமாகத் திரும்பலாம்.

 

9. நீங்கள் எதிர்பார்த்த நேரத்தில் குழந்தையைப் பிறக்க வைக்கலாம் (Baby birth at the time you want)

இது ஒரு மிகத் தவறான எண்ணமாகும். சரியான பிரசவத்திற்கான நேரம் வராமல் குழந்தையை வெளியே எடுப்பதோ அல்லது நேரம் தள்ளி குழந்தையைப் பிறக்க வைப்பதோ, இரண்டும் ஆபத்தில் முடியக்கூடும். அதனால் கர்ப்பிணிப் பெண்ணுக்குச் சரியான குழந்தை பிறக்கும் தருணம் வரும் வரையில் அத்தகைய முயற்சிகளைச் செய்யாமல் இருப்பது நல்லது.பொதுவாகப் பிரசவ வலி விட்டுவிட்டு வரும்.வலியில் தாய் களைப்படையும் போது,சற்று ஓய்வு கொடுத்து மருத்துவர்கள் குழந்தையை வெளி வர செய்ய முயல்வர்.ஆனால் சிக்கல் அதிகரிக்கும் போது அறுவை சிகிச்சை பிரசவம் மேற்கொள்ளப் படுகிறது.

 

10. அதிகமான மருந்து செலுத்தப்படும் (More medicines will be injected)

இது அவசியம் இல்லை. அறுவைசிகிச்சை பிரசவம் செய்யும் போது கர்ப்பிணிப் பெண்ணின் உடலில் வலியைத் தாங்கிக் கொள்ளவும், பிரசவத்தின் போது சில அசம்பாவிதங்கள் நடக்காமல் இருக்கவும் மருந்துகள் தரப் படுகிறது. எனினும், அதன் அளவு அந்தப் பெண்ணின் தற்போதைய உடல் நிலை, தேவை மற்றும் அவளின் வலியைத் தாங்கும் சக்தி பொறுத்தே தீர்மானிக்கப் படுகிறது. மேலும் மருத்துவர்கள் அதிக கவனத்தோடு மருந்துகளைக் கர்ப்பிணிப் பெண்களுக்கு அறுவைசிகிச்சையின் போது தருகிறார்கள்.

 

11.தாய்சேய் ஆரோக்கியம் பாதிப்பு(Affect mother’s and baby’s health)

அறுவை சிகிச்சை பிரசவம் மேற்கொள்ளப்பட்ட தாய் மற்றும் குழந்தையின் ஆரோக்கியம் கெட்டுவிடும் என்பது போன்ற வதந்திகளும் உலா வருகின்றன.குழந்தைக்கு எந்த பாதிப்பும் ஏற்படாது.தாய் சத்தான ஆகாரமும் போதிய ஓய்வும் எடுக்க வேண்டும்.வீட்டில் உள்ளவர்களின் அனுசரணையும்,அக்கறையும் மிக அவசியம்.இது அனைத்தும் கிடைக்கப் பெறத் தாய் தன் உடல் ஆரோக்கியத்தை விரைந்து மீட்டெடுக்க முடியும்.

 

12.தையல் பிரிந்துவிடும்(Problem in stiches)

இது பெரும்பாலான பெண்களின் பயமாக உள்ளது.கருப்பை முதல் வயிற்றுப் பகுதி வரை மிகவும் தரமான பொருட்களைக் கொண்டு கவனமாகவும் அக்கறையோடும் தையல் போடப்படுகிறது.ஆகத் தையல் பிரியத் தோராயமாக வாய்ப்பே இல்லை.இருந்தும் குறைவாக சில இடத்தில் அவ்வாறு நடந்திருந்தால்,உடனே மருத்துவரை அணுகி தையல் போட்ட இடத்தில் தொற்று ஏற்பட்டுள்ளதா என்று பரிசோதிக்க வேண்டும்.

 

மேலே குறிப்பிடப் பட்டுள்ள அறுவைசிகிச்சை பிரசவம் பற்றின விடயங்கள் உங்களுக்கு ஒரு தெளிவை ஏற்படுத்தி இருக்கும். இது ஒரு பாதுகாப்பான மற்றும் எளிய வழியாக உங்களுக்குத் தெரிந்தாலும், நீண்ட கால அடிப்படையிலும், நீண்ட ஆயுளோடு ஆரோக்கியமும் பெற்று உங்கள் குழந்தையோடு நலம் பெற்று வாழ நீங்கள் அதிகம் சுகப் பிரசவத்தை முயல்வதே நல்லது. எனினும், தாய் சேய் ஆகிய இருவரின் உயிரும் காப்பாற்றப் பட வேண்டும் என்ற சூழலில் இந்த அறுவைசிகிச்சை ஒரு நல்ல தீர்வாக இருக்கும்.

ஒரு தாயாக மற்ற தாய்மார்களுக்கு, வார்த்தைகள் அல்லது படங்கள் மூலமாக உங்களது அனுபவத்தைப் பகிர்ந்து கொள்ள நினைக்கிறீர்களா? தாய்மார்களை இணைக்கும் குழுவோடு சேர இங்கே கிளிக் செய்யுங்கள். நாங்கள் உங்களைத் தொடர்பு கொள்கிறோம்.

null

null