சுக பிரசவம் ஆவதற்கான அறிகுறிகள் என்னென்ன, ரெடியாவது எப்படி?

சுக பிரசவம் ஆவதற்கான அறிகுறிகள் என்னென்ன, ரெடியாவது எப்படி?

எந்தவொரு கர்ப்பிணியும் சுக பிரசவ வழியிலேயே குழந்தையைப் பெற்றெடுக்க வேண்டுமென விரும்புவாள். அதுதான் குழந்தையின் எதிர்காலத்திற்கும் கர்ப்பிணியின் ஆரோக்கியத்திற்கும் நல்லது. சுக பிரசவம் (Normal pregnancy signs in Tamil) ஆவதற்கான அறிகுறிகள் என்னென்ன, ரெடியாவது எப்படி?

 

ஒரு கர்ப்பிணிப் பெண் தனது பிரசவ காலத்தை எதிர்நோக்கிக் காத்திருப்பாள். ஏற்கனவே மருத்துவர் குழந்தை பிறக்கும் கால நேரத்தை குறித்து கணித்து கர்ப்பிணிப் பெண்ணிடம் அறிவித்திருப்பார். பொதுவாக மருத்துவர் இதை அதிநவீன அல்ட்ரா சவுண்ட் கருவியின் உதவியுடன் அறிந்து கொள்வார். அல்லது மாதவிடாய் சுழற்சியைக் கொண்டும் இந்த நாளை துல்லியமாகக் கணக்கிட இயலும்.

 

அதாவது கர்ப்பம் தரித்துள்ள பெண்ணிற்குக் கடைசியாக மாதவிடாய் எப்போது நிகழ்ந்தது என்பதைக் கருத்தில் கொள்ள வேண்டும்.அந்த தேதியைச் சரியாகக் குறித்துக் கொள்ளக் கொண்டும். இந்த தேதியிலிருந்து சுமார் 40 வாரங்கள் என்ற அளவில் கணக்கு எடுத்துக் கொள்ள வேண்டும். அதுவே குழந்தை பிறப்பதற்கான கால நேரமாகும்.

 

சுக பிரசவம் அறிகுறிகள்:

 

எந்த ஒரு கர்ப்பிணிப் பெண்ணும் சுகப் பிரசவ வழியிலேயே குழந்தையைப் பெற்றெடுக்க வேண்டும் என்று விரும்புவாள். அதுதான் குழந்தையின் எதிர்காலத்திற்கும் கர்ப்பிணிப் பெண்ணின் எதிர்கால உடல் ஆரோக்கிய நிலைகளுக்கும் ஏற்புடையது. பத்தாம் மாதம் தொடங்கிய உடனேயே கர்ப்பிணிப் பெண் தன் உடல் மாற்றங்களைக் கவனத்தில் கொள்ள வேண்டும். இதில் பல நுணுக்கமான விஷயங்களும் அறிகுறிகளும் பிரசவம் சீக்கிரம் நிகழப் போகின்றது என்பதை உணர்த்திய வண்ணம் இருக்கும். அப்படி என்னென்ன விஷயங்களைக் கர்ப்பிணிப் பெண்கள் கருத்தில் கொள்ள வேண்டும் என்பதைக் கீழே பார்க்கலாம்.

முதுகு வலி

பொதுவாகவே கர்ப்பிணிப் பெண்களுக்கு அவ்வப்போது முதுகு வலி ஏற்படுவது இயல்பானதுதான். இருப்பினும் பிரசவம் நிகழப்போகும் காலகட்டத்தில் இந்த முதுகுவலி வழக்கத்தை விட அதிகமாகக் காணப்படும். இதைக்கொண்டு பிரசவம் சீக்கிரம் ஏற்பட வாய்ப்பு உள்ளது என்பதைக் கர்ப்பிணிப் பெண்கள் உணர்ந்து கொள்ளலாம்.இது நிச்சயம் சுகப் பிரசவத்திற்கான அறிகுறி தான்.

 

செர்விக்ஸ் விரிவடைதல்

 

சுகப் பிரசவம் நிகழச் சாத்தியம் ஏற்படுவதற்கு சில நாட்களோ அல்லது வாரங்களுக்கு முன்னர் இந்த பிரசவ அறிகுறி தென்படும். கர்ப்பிணிப் பெண்கள் தங்கள் உடல் மாற்றங்களை உன்னிப்பாகக் கவனித்து அதன் மூலம் இந்த விஷயத்தில் அறிந்து பயமில்லாமல் எதிர் கொள்ளலாம். இதன் மூலம் அவர்கள் பிரசவத்தை எதிர்நோக்கி தங்களைத் தயார்ப்படுத்திக் கொள்ளலாம். செர்விக்ஸ் முழுமையாக விரிவடையும் பொழுது 10 சென்டி மீட்டர் என்ற அளவை அடைந்து இருக்கும்.

 

கருப்பை வாய் குழாய் சளி

 

இது பிரசவ வலி வரப் போவதற்கான மிகச்சிறந்த அறிகுறியாகும். கர்ப்ப காலத்தில் ஒரு பெண்ணின் உடலில் பல்வேறு ஹார்மோன்கள் சுரக்கத் தொடங்கும். கருவில் உள்ள குழந்தை முழு வளர்ச்சியைக் கடைசி மாதத்தில் எட்டி இருக்கும். அந்த நேரத்தில் குழந்தையின் தலை திரும்பி பெண்ணின் பிறப்புறுப்பு வழியாக வரத் தயாராகும். குழந்தையின் தலைப் பகுதியானது செர்விக்ஸ் பகுதியில் அழுத்தம் ஏற்படுத்திக் கொண்டு இருக்கும்.

 

இந்த நேரத்தில் செர்விக்ஸ் கிளான்டானது சளி மாதிரியான திரவத்தைச் சுரக்கத் தொடங்கும். இந்த சளியானது சற்று அடர்த்தியான தன்மையோடு காணப்படும். சில சமயங்களில் இதனோடு இரத்தம் அல்லது இரத்தக்கட்டிகள் காணப்படும். பிரசவம் நிகழப் போவதற்கான இந்த அறிகுறி பல கர்ப்பிணிப் பெண்களிடம் காணப்படுகின்றன. இருப்பினும் ஒரு சில கர்ப்பிணிப் பெண்களிடம் இந்த அறிகுறிகள் தென்படுவதில்லை.

 

பெல்விக் பகுதி தளர்ச்சி அடைதல்

 

குழந்தை கருவறையிலிருந்து வெளியே வர நேரம் வந்துவிட்டது என்றால் கர்ப்பிணிப் பெண்களின் பெல்விக் பகுதி எலும்புகள் மற்றும் இணைப்புகளும் சற்று தளர்ச்சி அடையத் தொடங்கும். இதுவும் பிரசவம் விரைவில் நிகழப் போவதற்கான அறிகுறியே ஆகும். அப்போது தான் எலும்புகள் சற்று விரிவடைந்து குழந்தை எளிதாகச் சுகப் பிரசவ வழியில் வெளி வர முடியும்.

இதையும் படிங்க: பல வகை பிரசவங்கள்- எத்தனை பிரசவ முறைகள் இருக்கின்றன?

 

அளவுக்கதிகமான சக்தி

 

கர்ப்பிணிப் பெண்கள் தங்கள் கர்ப்ப காலம் முழுவதும் சற்று சோர்வாகும் களைப்பாகவும் இருப்பர். ஆனால் சுகப் பிரசவம் நிகழப்போகும் தருணம் நெருங்குகையில் அவர்கள் மிகவும் தெம்பாகவும் சக்தி நிறைந்தவர்களாகவும் காணப்படுகின்றார்கள். எதாவது ஒரு வேளையைத் துருதுருவென்று செய்ய விரும்புவர். இதற்குக் காரணம் பிரசவத்தைத் தாங்க கூடிய சக்தி உடலில் இயற்கையாக உற்பத்தியாவது தான். இதை ஆங்கிலத்தில் நெஸ்டிங்(nesting) என்பார்கள்.

 

அடிக்கடி சிறுநீர் கழிக்க வேண்டும் என்ற உணர்வு

 

கடைசி பிரசவ காலத்தில் குழந்தையின் தலை திரும்பி பெல்விக் பகுதியில் இருக்கும். இந்த காரணத்தினால் கர்ப்பிணிப் பெண்ணின் சிறுநீர்ப்பை குழந்தையின் தலைப் பகுதியால் அழுத்தத்திற்கு உட்படுத்தப்பட்டுக் கொண்டே இருக்கும். அதனால் நிறைமாத கர்ப்பிணிப் பெண்கள் சிறுநீர் வருவது போன்ற உணர்வு ஏற்பட்டபடி இருக்கும். இது சுகப் பிரசவம் நிகழச் சாத்தியம் ஏற்படுவதற்கான அறிகுறி ஆகும்.

 

பிறப்புறுப்பில் லேசான வலி

 

கர்ப்பிணிப் பெண்களுக்குப் பிரசவ காலம் நெருங்கிவிட்டது என்ற சமயத்தில் அவர்களின் பிறப்பு உறுப்பில் வலி ஏற்படுகின்றது. இந்த வித வலி எல்லா பெண்களுக்கும் ஏற்படுவதில்லை. சில பெண்களுக்கு மட்டும் ஏற்படுகின்றது.

 

மூச்சு விடுதல் இலகுவாகுதல்

 

கர்ப்பிணிப் பெண் தன் பிரசவ நேரத்தை எட்டிக் கொண்டிருக்கும் போதே அவளால் இலகுவாக சுவாசிக்க முடிகின்றது. ஆரம்பத்தில் இருந்து மூச்சுத் திணறல் எல்லாம் குறையும். குழந்தையின் நிலை மாறுதலே இந்த புதிய மாற்றத்தை சாத்தியப்படுத்தும். இதற்கு முக்கிய காரணம் டையப்ரம் பகுதியிலிருந்து அழுத்தம் குறைந்ததே ஆகும்.

 

செர்விக்ஸ் மெல்லிய நிலையை அடைதல்

 

செர்விக்ஸ் பகுதியானது பிரசவ நேரத்தை நெருங்கும் காலகட்டத்தில் மெல்லிய நிலையை அடையும். இவ்வாறான மாற்றம் செர்விக்ஸ் பகுதியில் ஏற்படுவதாலேயே அதனால் இலகுவாக விரிவடைய முடியும். இதை ஆங்கிலத்தில் தின்னிங்(thinning) என்று கூறுவார்கள். இதனால் குழந்தை எளிதாக பிறப்பு உறுப்பு வழியே வெளியேற முடியும்.

 

குழந்தையின் தலைப்பகுதி கீழிறங்கும்

 

குழந்தையின் தலைப் பகுதியானது சற்றுத் திரும்பி கீழே வரும். இவ்வாறான நிலையை கர்ப்பிணிப் பெண்ணின் உடலமைப்பில் இருந்தும் கண்டு கொள்ளலாம். கூர்ந்து கவனித்தால் கர்ப்பிணி பெண் இந்த மாற்றத்தை உணர வேண்டும். இயற்கையாகவே ஒரு பெண்ணின் உடல் ஒவ்வொரு விசயத்திலும் குழந்தையைச் சுகமான வழியில் பிரசவிக்கத் தயார்ப் படுத்திக் கொண்டே இருக்கும்.

 

மலம் வருவது போன்ற உணர்வு

 

குழந்தையின் தலைப் பகுதியானது தொடர்ச்சியாக பெல்விக் பகுதியில் அழுத்தம் ஏற்படுத்திக் கொண்டிருப்பதால் அந்தப் பகுதியில் அவ்வப்போது சிறு வலி ஏற்பட்டபடியே இருக்கும். இந்த உணர்வைக் கர்ப்பிணிப் பெண்கள் மலம் வருவது போன்று உணர்வு என்று தவறாக நினைத்துக் கொள்கின்றனர். இது உண்மையில் அழுத்தத்தின் காரணமே ஆகும். இந்த அறிகுறி தென்பட்டாலும் சுகப் பிரசவம் நிகழப் போகிறது என்று அர்த்தம்.

 

குழந்தையின் அசைவு

 

பொதுவாகக் கர்ப்பிணிப் பெண்களின் உடலில் ஏழாம் மாதம் தொடக்கத்திலிருந்தே குழந்தையின் அசைவு நன்கு தெரியத் தொடங்கும். குழந்தை அடிக்கடி கை கால்களை உதைக்கும். வெவ்வேறு திசைகளில் நெளியும். ஆனால் பிரசவ காலம் நெருங்கும் சமயத்தில் குழந்தையின் அசைவு குறைந்திருக்கும். இந்த அறிகுறியும் சுகப் பிரசவம் ஏற்படப் போவதை உணர்த்தும்.

 

கருப்பை சற்று சுருங்கும்

 

குழந்தை வளர்ச்சி அடைய அடையத் தாயின் கருப்பை விரிவடையும். ஆரம்ப மாத கர்ப்ப காலத்தில் இந்த நிகழ்ச்சி நடந்து இருக்கும். ஆனால் பிரசவ நேரம் நெருங்கும் சமயம் இது சற்று மாறுதலாக நடக்கும். கருப்பை சுருங்க தொடங்கும் இதனால் எந்த வலியும் ஏற்படாது. இதை மிகவும் உன்னிப்பாகக் கவனிப்பதன் மூலம் கண்டறிந்து கொள்ளலாம். இந்த அறிகுறியும் சுகப் பிரசவம் நிகழப் போகிறதை உணர்த்துகிறது.

 

பனிக்குடம் உடையும்

 

குழந்தையானது தாயின் கருவறையில் உள்ள அம்னியாட்டிக் திரவத்தில் வாழும். இந்த அம்னியாட்டிக் திரவமானது நிறமற்றது மற்றும் நறுமணம் அற்றதாகும். இது பார்வைக்குச் சிறுநீர் போலவே தென்படும். இந்த திரவத்தையும் சிறுநீரையும் வேற்றுமைப் படுத்திப் பார்ப்பது சற்று கடினமானது. பிரசவம் ஏற்படுவதற்கான முக்கிய அறிகுறியாக இந்த விஷயம் கருதப்படுகின்றது. பனிக்குடம் உடைந்து நீர் மெல்ல கசியத் தொடங்கும். இந்த அறிகுறி தென்பட்ட உடனேயே கர்ப்பிணிப் பெண்கள் மருத்துவரை அணுக வேண்டும்.

 

பிரசவ வலி

 

சுகமான வழியில் குழந்தை பிறப்பதற்கான முக்கிய அறிகுறி பிரசவ வலி ஏற்படுவது ஆகும். கர்ப்பப்பை சுருங்கி விரியத் தொடங்கியவுடன் பிரசவம் வலி பெண்ணுக்கு ஏற்படத் தொடங்கும். ஆரம்பக்கால பிரசவ வலி சற்று குறைவாகவும் உச்சக்கட்ட பிரசவ வலி சற்று அதிகமாகவும் இருக்கும். உண்மையான பிரசவ வலி வலிக்கும் பொய்யான பிரசவ வலிக்கும் உள்ள வேற்றுமையைக் கர்ப்பிணிப் பெண்கள் உணர்ந்து கொள்ள வேண்டும். அதைப் பற்றி சற்று விரிவாகக் காணலாம்.

 

உண்மையான பிரசவ வலி

 

உண்மையான பிரசவ வலி சரியான இடைவெளியில் வரும். அதாவது பத்து நிமிடத்துக்கு ஒரு முறை என்ற அளவில் வரும். இந்த இடைவெளி அளவு சிறிது சிறிதாகச் சுருங்கத் தொடங்கும்.அதாவது பத்து நிமிடம் ஏழு நிமிடம், பின் ஏழு நிமிடம் ஐந்து நிமிடம் என்று குறைவு ஆகும். அதே மாதிரி அந்த வலியின் கால அளவும் அதிகரிக்கும். இறுதிக்கட்ட பிரசவ நேரத்தில் இறங்கும் பொழுது இந்த பிரசவ வலி நொடிகளுக்கு ஒரு நொடி திரும்ப வாய்ப்பு உள்ளது.

 

பொய்யான பிரசவ வலி

 

இந்த பொய் பிரசவ வலியானது ஒரு ஒழுங்கான கால அளவில் ஏற்படாது. அந்த வலியின் அளவும் அதிகரித்துக் கொண்டு செல்லாது. அதே மாதிரி வலிகளுக்கு இடையேயான கால இடைவெளி குறையாது. இது சாதாரண வயிற்று அல்லது தசைப் பிடிப்பு மாதிரியானது. இதை பிராக்ஸ்டன் ஹிக்கஸ் கன்ட்ராக்ஜன் (Braxton-Hicks contraction) என்பார்கள்.இதுவும் கடைசி கர்ப்ப காலங்களிலே ஏற்படுகிறது.

 

கர்ப்பிணிப் பெண்களுக்குச் சுகப் பிரசவம் ஏற்படுவதற்கான அறிகுறிகள் என்னென்ன என்று அறிந்து கொண்டு இருப்பீர்கள் என்று நம்புகிறோம்.

 

இதையும் படிக்க: பிறந்த குழந்தைகளின் இறப்பைத் தடுக்க… தாய் கட்டாயமாக செய்ய வேண்டிய 2 டெக்னிக்

 

ஒரு தாயாக மற்ற தாய்மார்களுக்கு, வார்த்தைகள் அல்லது படங்கள் மூலமாக உங்களது அனுபவத்தைப் பகிர்ந்து கொள்ள நினைக்கிறீர்களா?  தாய்மார்களை இணைக்கும் குழுவோடு சேர இங்கே கிளிக் செய்யுங்கள். நாங்கள் உங்களைத் தொடர்பு கொள்கிறோம்.

null

null