கோடை விடுமுறையைக் குழந்தைகள் சிறப்பாகச் செலவழிக்க 10 சிறந்த வழிகள்

கோடை விடுமுறையைக் குழந்தைகள் சிறப்பாகச் செலவழிக்க 10 சிறந்த வழிகள்

கோடை விடுமுறை (Summer holidays and summer activities)

கோடைக் காலம் வந்து விட்டாலே அனைத்து தாய்மார்களுக்கும் ஒரு மிகப் பெரிய பொறுப்பும் பதற்றமும் சேர்ந்து கொள்ளும்.காரணம் அது குழந்தைகளின் விடுமுறைக் காலம் அல்லவா?வீட்டில் மற்ற வேலைகளையும் பார்த்து கொண்டு குழந்தைகளையும் சமாளிப்பது பெண்களுக்குச் சவால் நிறைந்த காரியம்தான்.சுட்டிக் குழந்தை செய்யும் அனைத்து சேட்டைகளையும் சமாளிக்க முடியாமல் ஒவ்வொரு தாயும் அவதிப்படுவதை விவரிக்கவா வேண்டும். ஒவ்வொருவரின் கதைகளைக் கேட்டால் ஒரு திரைப்படமே எடுத்து விடலாம் என்றல்லவா இருக்கும்!

 

பயனுள்ள விடுமுறையாக மாற்றுங்கள்  (Spend the holidays in useful ways)

இருந்தாலும், கோடை விடுமுறைக் காலத்தை வெறும் சேட்டைகளிலும், வெட்டியாய் பொழுதைக் கழிப்பதில் மட்டும் கடத்தி விடக் கூடாது. கோடைக்கால விடுமுறையை உங்கள் குழந்தைக்குப் பயனுள்ளதாகவும், பள்ளிக்கூடம் திறப்பதற்கு முன் அவன் விரும்பிய ஏதாவது ஒன்றை கற்றுக் கொள்ளும் படியாகவும் மாற்ற வேண்டும். இதனால் உங்கள் குழந்தை விளையாடும் மற்றும் சுட்டித் தனம் செய்யும் நேரம் போக, ஒரு திறமையையும் சேர்த்துக் கற்றுக் கொள்வான்.

 

உங்கள் குழந்தைக்குக் கோடை விடுமுறையில் நிறைய நேரம் ஓய்வு கிடைக்கும். எனினும் அவனை எப்போதும் தொலைக்காட்சி முன் அமர்ந்து கேலிச்சித்திரங்ளைப் பார்க்க ஊக்கப் படுத்தாமல், அவனது செயல் திறன் மற்றும் சிந்திக்கும் திறனை வளர்க்கும் வகையில் அவனுக்குப் பிடித்த மாதிரி ஒன்றை நீங்கள் அறிமுகப் படுத்த வேண்டும். மேலும் அவனுடன் நீங்கள் நேரம் செலவிட்டு அவனுக்கு அதனை கற்றும் கொடுக்க வேண்டும். இது மட்டுமல்லாமல், உங்களைத் தவிர வேறு யாரும் வீட்டில் அவனுடன் நட்போடும், குறும்புத்தனம் செய்து கொண்டும் விளையாட ஆள் இல்லை என்றால், நீங்கள் தான் அவனுக்கு நண்பனாக இருந்து அவனுடன் சேர்ந்து அந்த நேரத்தைக் கழிக்க வேண்டும்.

 

சரியான செயல்திறனைத் தேர்வு செய்யுங்கள்  (Choose right activity)

எந்த வகை செயல் திறனை உங்கள் குழந்தைக்குக் கற்றுக் கொடுக்கப் போகின்றீர்கள் என்று நீங்கள் தெளிவாக முடிவு எடுக்க வேண்டும். குறிப்பாக உங்களுக்கு அதைப் பற்றி ஓரளவிற்காவது சில தகவல்கள் தெரிந்திருக்க வேண்டும். அப்போது மட்டுமே உங்களால் உங்கள் குழந்தைக்குச் சரியாக கற்றுக் கொடுக்க முடியும்.

 

கோடை விடுமுறையைக் குழந்தைகள் சிறப்பாகச் செலவழிக்க 10 சிறந்த வழிகள் (Summer activities for kids)

கோடைக்கால விடுமுறையில் உங்கள் சுட்டிக் குழந்தையை எப்போதும் சுறுசுறுப்பாகவும் உற்சாகமாகவும் வைத்துக் கொள்ளச் சுவாரசியமான பல்வேறு வழிகள் உள்ளன.அதற்காகவே உங்களை நீங்கள் தயார்ப்படுத்திக் கொள்ள உங்களுக்காக இங்கே சில சுவாரசியமான செயல்திறன் வேலைகளுக்கான சிறந்த 10 யோசனைகளை வழங்கியுள்ளோம்.இனி நீங்கள் உங்கள் குழந்தைக்குக் கற்றுக் கொடுக்க வேண்டியது தான்!

 

1.படம் வரைதல் (Drawing)

இது அனைத்துக் குழந்தைகளுக்கும் பிடித்த ஒரு பொழுதுபோக்குத் திறன். நிச்சயம் உங்கள் குழந்தைக்குப் படம் வரைவதில் ஆர்வம் இருக்கும். அவனிடம் ஒரு காகிதம் மற்றும் எழுதுகோல்களைக் கொடுத்துத் தான் பாருங்களேன்! அவன் தனக்குள் இருக்கும் திறமையை எப்படி வெளி கொண்டுவருகின்றான் என்று பின் தெரிந்து கொள்வீர்கள்.அவனுடன் அமர்ந்து நீங்களும் அவனுக்குச் சின்ன சின்னப் படங்களை வரையக் கற்றுக் கொடுக்கலாம். அப்படிச் செய்யும் போது மேலும் அவன் முறையாக கற்றுக் கொள்ளத் தொடங்குவான். இதனால் அவனது கற்பனைத் திறனும் அதிகரிக்கும்.

 

2.சிறு வீட்டுத் தோட்டம் அமைத்தல் (Gardening)

இன்று பெரும்பாலோனோர் அடுக்கு மாடிக் குடி இருப்பில் வசிக்கின்றனர். இதனால் தோட்டம் அமைக்கவோ, விளையாடவோ குழந்தைகளுக்குப் போதிய அளவு இடம் கிடைப்பதில்லை. இருந்தாலும், உங்கள் குழந்தைக்குச் செடி வளர்ப்பதில் ஆர்வத்தைத் தூண்ட உங்கள் வீட்டு மேல்மாடம் மற்றும் சமையல் அறையில் சிறு தொட்டிகளை வைத்து, செடிகளை வளர்க்க ஊக்குவியுங்கள். வெங்காயம், தக்காளி, வெந்தயம்,சில காய்கள்,பூச்செடிகள் ஆகியவற்றின் விதைகளை மண்ணில் விதைத்து அது எப்படி முளைத்து வளர்கின்றது என்று காட்டுங்கள். மேலும் அதற்கு அவனைத் தினமும் தண்ணீர் விடச் சொல்லி,இயற்கை மற்றும் விவசாயத்தின் அருமை பெருமைகளைப் பற்றிக் கூறிப் புரிய வையுங்கள். இதனால் அவன் இயற்கை மீது பற்று கொண்டவனாகவும், சுற்றுச்சூழல் மீது அக்கறை கொண்டவனாகவும் பின்னாளில் விளங்குவான். தன்னால் ஒரு மரத்தை / செடியை / உயிரை உருவாக்க முடியும் என்ற நம்பிக்கை அவனுக்குத் தோன்றும்.

 

3.பறவைகளுக்கு உணவு தருதல் (Feed birds)

இந்த விடுமுறையில் வீட்டு மொட்டை மாடியில் பறவைகளுக்கென்று ஒரு தட்டில் உணவு மற்றும் தண்ணீர் வைப்பதை உங்கள் குழந்தையின் வாடிக்கையான பழக்கமாக மாற்றுங்கள். குறிப்பாக காகம், மைனா, புறா, சிட்டுக் குருவி போன்ற பல பறவைகள் சரியான உணவு கிடைக்காமல் பறந்து திரிந்து அலைகின்றன. ஆக ஓரிடத்திலேயே உணவு தினமும் கிடைக்கும் என்ற சூழலில்,அங்கு பறவைகள் வாடிக்கையாகத் தினமும் வரத் தொடங்கும். இதை உங்கள் குழந்தைக்குக் காட்டி உற்சாகப் படுத்துங்கள். பிற உயிர்களிடம் அவனுக்கு அன்பும், உதவும் நற்குணமும் இதனால் வளரும். மேலும் இது அனைவரது மனதிற்கும் உற்சாகத்தை ஏற்படுத்தும்.

 

4.கைவினைப் பொருட்கள் செய்தல் (Do craftworks)

உங்கள் குழந்தைக்குச் சிறு கைவினைப் பொருட்கள் செய்ய கற்றுக் கொடுக்கலாம். குறிப்பாக நாம் மறந்து போன கைவினைப் பொருட்கள் பல உள்ளன.உதாரணமாக ஓலைப் பெட்டி, தென்னை ஓலையில் பாம்பு செய்வது, பம்பரம் செய்வது என்பன போன்றவற்றைச் செய்யச் சொல்லித் தரலாம். இது மட்டுமல்லாது, அவனுக்கு வீட்டில் இருக்கும் தேவை இல்லாத பழைய பொருட்களை வைத்து, குறிப்பாக அட்டைப் பெட்டி, பழைய டப்பாக்கள் என்பனவற்றை எப்படி உபயோகமான பொருட்களாக மாற்றுவது என்று கற்றுக் கொடுங்கள். இது அவனுக்குச் சிந்திக்கும் திறனை வளர்ப்பதோடு, சற்று சுவாரசியமான வேலையாகவும் அமையும்.

 

5.வண்ணம் தீட்டுதல் (Painting)

வண்ணம் தீட்டுதல் என்றாலே அனைவருக்கும் மிகவும் பிடிக்கும். அப்படி இருக்கும் போது சிறு குழந்தைக்கு மட்டும் அது பிடிக்காமல் போய்விடுமா? குழந்தைகளுக்கென்றே பல வகை வண்ணங்கள் கடைகளில் கிடைக்கின்றன.வண்ண எழுதுகோல்கள்,க்ரயான்கள், வாட்டர் கலர்,போஸ்டர் கலர்,ஃபேப்ரிக் கலர்,ஆயில் கலர் என்று பல வகைகளை அடுக்கிக் கொண்டே போகலாம். உங்கள் குழந்தைக்குப் படம் வரைய ஊக்கப் படுத்துவதோடு சேர்ந்து அவனுக்கு வண்ணம் தீட்டவும் கற்றுக் கொடுங்கள். இது மேலும் அவனது கற்பனைத் திறனை அதிகப் படுத்துவதோடு, அவனாகவே சில புதிய வண்ணங்கள் மற்றும் ஓவியங்களை உருவாக்க தேவையான ஊக்கம் பெறுவான். இந்த ஊக்கமே உங்கள் குழந்தை திறமையான கலைஞனாக வருங்காலத்தில் வர முக்கிய காரணமாக அமையும்.

 

6.சமையலில் ஆர்வம் ஏற்படுத்துதல் (Cooking)

குழந்தைகள் விளையாடச் சிறு சொப்பு சாமான்கள் கடைகளில் கிடைக்கின்றன. இவை மரம், கல், நிலை வெள்ளி,நெகிழி முதலிய பல்வேறு பொருட்களில் செய்யப் பட்டு சந்தையில் கிடைக்கின்றன. எனினும் நீங்கள் உங்கள் வசதிக்கேற்ப, கற்கள் அல்லது மரத்தால் செய்த சொப்பு சாமான்கள் வைத்து உங்கள் குழந்தைக்குச் சமையல் செய்யும் விளையாட்டை கற்றுக் கொடுக்கலாம். உங்கள் குழந்தையை மேலும் ஊக்கப் படுத்த, சில காய், மற்றும் பழங்களைக் கொடுத்தோ அல்லது நீங்கள் சமைத்த உணவில் சிறிது கொடுத்தோ விளையாட ஊக்குவிக்கலாம். இதனால் உங்கள் குழந்தைக்குச் சிறு வயதிலேயே சமையற்கலையில் ஆர்வம் ஏற்படக்கூடும்.

 

7.கட்டுரை எழுதுதல் (Essay writing)

உங்கள் குழந்தைக்கு எழுதுவதில் ஆர்வம் உள்ளது என்றால் அவனைச் சிறு, சிறு கட்டுரைகள் மற்றும் கதைகள் எழுத ஊக்கவிக்கலாம். இவ்வாறு செய்யும் போது அவனது சிந்திக்கும் மற்றும் கற்பனைத் திறன் நிச்சயம் அதிகரிக்கும் என்பதில் சந்தேகம் வேண்டாம்.

 

8.பேச்சுத் திறனை ஊக்கப்படுத்துதல் (Improve speaking skill)

உங்கள் குழந்தை ஒரு நல்ல பேச்சாளனாக ஆகும் திறன் உள்ளது என்று நீங்கள் நினைத்தால், அவனுக்கு ஒரு சிறிய தலைப்பு கொடுத்து அவ்வப்போது நேரம் கிடைக்கும் போதெல்லாம் அதைப் பற்றிப் பேசச் சொல்லுங்கள். மேலும் அவனை ஊக்கவிக்கும் வகையில் அவனுக்கு நீங்கள் சில பொது அறிவு தகவல்களையும் சொல்லிக் கொடுங்கள்.

உதாரணமாக மாநிலங்களின் பெயர்கள்,நதிகளின் பெயர்கள், திருக்குறள் போன்றவற்றைச் சொல்லித் தரலாம்.

 

9.மூளைத் திறனை அதிகப்படுத்தும் வகையிலான கணக்குகள் (Doing sums)

இன்று குழந்தைகளின் மூளைத் திறன் அதிகப்படும் வகையில் சிறு சிறு உபயோகமான கணக்குப் பாடங்கள் அல்லது நுணுக்கமான வகையில் கற்றுக்கொள்ள வாய்ப்பளிக்கும் வகையில் பல செயல் திறன் பாடங்கள் உள்ளன. அவற்றை நீங்கள் உங்கள் குழந்தைக்குச் சுவாரசியம் குறையாமல் கற்றுக் கொடுக்கலாம்.

 

10.நீச்சல் (Swimming)

இது ஒரு அற்புதமான தற்காப்புக் கலையாகும்.உங்கள் வீட்டில் தொட்டி அமைத்தோ அல்லது அருகில் உள்ள பாதுகாப்பான நீர்நிலைகளுக்கு

உங்கள் பிள்ளைகளை அழைத்துச் சென்று நீச்சல் கற்றுக் கொடுக்கலாம்.வெயில் காலத்தில் தண்ணீரில் விளையாடுவது குழந்தைகளுக்கு மிகவும் பிடிக்கும்.நீச்சல் அவர்களின் உடல் ஆரோக்கியத்திற்கு மிகவும் நல்லது.

 

இவை மட்டும் இல்லாமல், மேலும் பல கோடை விடுமுறைக்கால செயல் திறன்கள் உங்கள் குழந்தைக்காக உள்ளன. எனினும், அவனுக்கு நீங்கள் அதனைக் கற்றுக் கொடுக்கும் முன் அதைப் பற்றிய பல விசயங்களை நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டியது முக்கியம். உங்கள் குழந்தையை உறவினர்கள் வீடு, பூங்கா, கண்காட்சி, அருங்காட்சியகம் போன்ற இடங்களுக்கு அழைத்துச் செல்லுங்கள். இது மேலும் அவனது நேரத்தை உபயோகமான வழியில் செலவு செய்வதோடு, பல விசயங்களைக் கற்றுக் கொள்ள நல்ல சூழலையும் உருவாக்கும்.

ஒரு தாயாக மற்ற தாய்மார்களுக்கு, வார்த்தைகள் அல்லது படங்கள் மூலமாக உங்களது அனுபவத்தைப் பகிர்ந்து கொள்ள நினைக்கிறீர்களா? தாய்மார்களை இணைக்கும் குழுவோடு சேர இங்கே கிளிக் செய்யுங்கள். நாங்கள் உங்களைத் தொடர்பு கொள்கிறோம்.

null

null