பன்றி காய்ச்சல் அறிகுறிகள், வராமல் தடுக்கும் வழிகள்?

பன்றி காய்ச்சல் அறிகுறிகள், வராமல் தடுக்கும் வழிகள்?

2009ஆம் ஆண்டிற்குப் பிறகு மெல்ல பரவி உலக அளவில் மக்களை அதிர்ச்சிக்குள்ளாக்கிய ஒரு வைரஸ் காய்ச்சல் தான் பன்றி காய்ச்சல். இந்த காய்ச்சலை ஆங்கிலத்தில் ஸ்வைன் ப்ளூ(swine flu) என்பார்கள். இந்த நோய் சாதாரணமானது கிடையாது. இந்த நோய் தாக்கினால் பல்வேறு விபரீதங்கள் ஏற்பட வாய்ப்புள்ளது.

உச்சக்கட்டமாக உயிரையே எடுக்கக்கூடிய கொடூர காய்ச்சல் தான் இது. அதனால் இந்த நோய் தாக்காமல் பாதுகாத்துக் கொள்வது மிகவும் முக்கியமானது. அதிலும் குழந்தைகளுக்கு இந்த நோய் தாக்காமல் இருக்கக் கூடுதல் கவனம் தேவை. அதற்கு இந்த நோய் பற்றிய விழிப்புணர்வு மிகவும் அவசியமானது. இந்த பதிவில் பன்றி காய்ச்சல் எதனால் வருகின்றது? அதற்கான அறிகுறிகள் என்ன? எப்படி வராமல் தடுத்துக் கொள்ளலாம்? என்று அனைத்து விவரங்களையும் தெளிவாகக் காணலாம்.

பன்றி காய்ச்சல் என்றால் என்ன?

பன்றி காய்ச்சல் வைரஸ் கிருமிகளால் ஏற்படும் நோயாகும். இது பொதுவாகப் பன்றிகள் அல்லது கோழிகள் மூலமாக மனிதர்களுக்குப் பரவும் வைரஸ் காய்ச்சல். இந்த வியாதியை எச்1 என்1 என்ற வைரஸ் கிருமி ஏற்படச் செய்கின்றது. பன்றியின் சுவாசப்பையில் இருக்கும் இந்த வைரஸ் கிருமியானது மனிதர்களைத் தொற்றும் தன்மை கொண்டது. இது ஒருவகையான சுவாச நோய் ஆகும்.

பன்றி காய்ச்சல் நோய் எங்கிருந்து பரவ தொடங்கியது?

மெக்ஸிகோ நாட்டில் உள்ள பன்றி பண்ணையில் இந்த பன்றி காய்ச்சல் பரவத்தொடங்கியது. அங்கே இந்நோய் தாக்கத்திற்குப் பல ஆயிரம் நபர்கள் பாதிக்கப்பட்டனர். அதில் நூற்றுக்கும் மேற்பட்டவர்கள் பலியானார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. அந்த அளவிற்கு உயிரைக் கூட எடுக்கும் மோசமான வியாதி
இதுவாகும்.

பன்றி காய்ச்சல் யாரை எல்லாம் தாக்கும்?

இந்த நோய் தாக்கப்படுவதற்கு வயது வரம்பு என்பதெல்லாம் கிடையாது. குழந்தைகள் முதல் வயதானவர்கள் வரை யாரை வேண்டுமானாலும் இந்த நோய் தாக்கும் அபாயம் உள்ளது. அதிலும் குறிப்பாக உடலில் எதிர்ப்புச் சக்தி குறைவாக உள்ள நபர்களை இந்த நோய் எளிதில் தொற்றிக் கொள்ளும்.

பன்றி காய்ச்சலுக்கான அறிகுறிகள் என்ன?

பன்றிக்காய்ச்சல் நோய்க்கு பல்வேறு விதமான அறிகுறிகள் உள்ளன அவற்றை எல்லாம் அறிந்து கொள்ளலாம்.

  • பசி எடுக்காது
  • தொடர்ந்து தலைவலி ஏற்படும்
  • இருமல் சளி தும்மல் ஏற்படும்
  • மூக்கில் நீர் வடியும்
  • தொண்டையில் வலி ஏற்படும்
  • இடைவிடாத காய்ச்சல் இருக்கும்
  • வயிற்றுப்போக்கு மற்றும் வாந்தி ஏற்படும். (வயிற்றுப்போக்கை கட்டுப்படுத்த)
  • தொடர்ச்சியான தலைவலி
  • குளிர் மற்றும் நடுக்கம் ஏற்படும்
  • தலைச்சுற்றல் அல்லது மயக்கம்
  • உணவின் மீது வெறுப்பு ஏற்படுதல்
  • உடல் பகுதிகளில் வலி குறிப்பாக இதய மற்றும் வயிற்றுப் பகுதிகளில் வலி அதிகமாக இருக்கும்.
  • நோய் முற்றிய நிலையில் நிமோனியா ஏற்படலாம்
  • சில சமயம் உயிரிழப்பும் ஏற்படலாம்
  • எந்த நோயும் வராமல் தடுக்க என்ன தரலாம்?

குழந்தைக்கு பன்றி காய்ச்சல் ஏற்பட்டிருந்தால் எப்படி கண்டுபிடிப்பது?

மேலே சொன்ன சில அறிகுறிகள் தென்படும். அதுபோக கீழே பட்டியல் இடப்பட்டுள்ள
சில அறிகுறிகள் தெரியலாம்.

  • மூச்சுவிடச் சிரமப்படுவார்கள்.
  • போதுமான அளவு தண்ணீர் குடிக்க மாட்டார்கள்.
  • மிகவும் சோர்வாகக் காணப் படுவார்கள். எழ முடியாமல் தூங்கிக் கொண்டே இருப்பார்கள்.
  • அமைதி இல்லாத மனதோடு அழுது கொண்டே இருப்பார்கள்.
  • தோலில் தடிப்பு காணப்படும்.
  • குழந்தையின் தோல் ஒரு வித நீல நிறமாகக் காணப்படும்.

இந்த அறிகுறிகள் எதாவது குழந்தைகளுக்கு இருக்கும் பட்சத்தில் பெற்றோர்கள் உடனடியாக மருத்துவரை அணுக வேண்டும். உரிய சோதனைகள் மேற்கொள்ள வேண்டும். சாதாரண காய்ச்சல் என்று கவனமின்றி விட்டால், விளைவு மோசமாகிவிடும்.

சாதாரண காய்ச்சலுக்கும் பன்றி காய்ச்சலுக்கும் எப்படி வித்தியாசம் கண்டுபிடிப்பது?

இந்த குழப்பம் பலருக்கும் உள்ளது. சாதாரண காய்ச்சல் போன்ற அறிகுறிகள் தான் பன்றி காய்ச்சலுக்கும் நிலவும். சாதாரண காய்ச்சலின் போது ஏற்படும் உடல் சோர்வு ,சளி பிடிப்பது போன்ற எல்லா பிரச்சினைகளும் இதிலும் ஏற்படும். ஆனால் மேல் சொன்ன அறிகுறிகள் கூடுதலாகத் தென்பட்டால் அது பன்றி காய்ச்சலாக இருக்க நிறைய வாய்ப்புகள் உள்ளன.

அதே போல பன்றி காய்ச்சல் ஏற்பட்டவர்களுக்குச் சளி பிடித்தல் பிரச்சனை சீக்கிரமாகவே ஏற்பட்டுவிடும்.உடல் சோர்வு சற்று அளவுக்கு அதிகமாகவே இருக்கும்.அதாவது இரண்டு மூன்று வாரங்கள் தொடர்ச்சியாக காய்ச்சல் வந்த நபர்கள் எப்படி இருப்பார்களோ அப்படி இவர்கள் காணப்படுவார்கள் அல்லது உணர்வார்கள்.

படிக்க: டெங்கு காய்ச்சல் அறிகுறிகள்

அதே போன்று உடல் சூடு சில சமயம் அதிகரிக்கும் சில சமயம் குறையும். இவற்றை எல்லாம் கொண்டு பன்றி காய்ச்சலை இனம் கண்டு கொள்ள முடியும். உடனடியாக இந்த நிலையில் மருத்துவரைச் சந்தித்து சிகிச்சை மேற்கொள்ள வேண்டும். இதை அப்படியே அலட்சியமாக விடக் கூடாது.

காய்ச்சல் வந்தவர்களில் யாரெல்லாம் கூடுதல் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்?

சமீபமாக வெளிநாடு சென்று திரும்பிய நேரத்தில் காய்ச்சல் ஏற்பட்டு இருந்தால், சம்பந்தப்பட்ட நபர்கள் உடனடியாக அரச மருத்துவமனைக்குச் சென்று பன்றி காய்ச்சல் அறிகுறி உள்ளதா? என்று சோதனை செய்து கொள்ள வேண்டும்.

இந்த பன்றி காய்ச்சல் வியாதிக்கு மருத்துவம் என்ன?

பன்றி காய்ச்சல் நோய் ஏற்பட்டவர்களுக்கு டமி ப்ளூ மற்றும் ரிலின்சா ஆகிய மருந்துகள் பரிந்துரைக்கப்படுகின்றன. 48 மணி நேரத்திற்குள் இந்த மருந்துகளை நோயாளிகள் எடுத்துக் கொள்வது நல்லது.

நோய் ஏற்பட்ட ஆரம்பக் கட்டத்திலேயே மருத்துவரின் ஆலோசனையோடு உரிய முறையில் இந்த மருந்துகளை எடுத்துக் கொள்வதன் மூலம்,நோயாளிகள் அடுத்த ஒன்று அல்லது இரண்டு நாட்களில் மருந்தின் அளவை குறைத்துக் கொள்ளலாம்.

டமி ப்ளூ மருந்து

இந்த மருந்தை ஒரு வயதுக்கு மேற்பட்ட குழந்தைகளுக்கு மட்டுமே கொடுக்க வேண்டும். இந்த மருந்தினை தொடர்ச்சியாக ஐந்து முதல் ஏழு நாட்கள் வரை நோயாளிகளுக்குத் தரலாம்.

ரிலின்சா மருந்து

இந்த மருந்தை ஏழு வயது நிறைந்தவர்கள் மற்றும் அதற்கு மேற்பட்ட வயதினர்களுக்குச் சாப்பிடத் தரலாம். இதனைத் தடுப்பு மருந்தாக 5 வயது நிறைந்தவர்கள் மற்றும் 5 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு வழங்கலாம்.

இதில் எந்த மருந்துகளையும் மருத்துவரின் பரிந்துரை இல்லாமல் சுயமாகச் சாப்பிடக்கூடாது. இந்த மருந்துகளை வரைமுறையின்றி சாப்பிட்டால் மிகவும் மோசமான பின் விளைவுகள் ஏற்படக்கூடும்.

பன்றி காய்ச்சல் வந்தவர்கள் செய்ய வேண்டியது என்ன?

பயப்பட வேண்டாம்

பன்றிக் காய்ச்சல் நோய் ஏற்பட்டவர்கள் பயந்து விடக்கூடாது. மேலும் அறியாமையால் வீட்டிலேயே முடங்கிக் கிடக்கக் கூடாது உடனே மருத்துவமனைக்குச் சென்று உரிய சிகிச்சைகளை மேற்கொண்டு நோயிலிருந்து விடுபட நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். உரிய சிகிச்சை முறையால் எந்தவிதமான நோயிலிருந்தும் மீண்டு வர இயலும் என்பதை நினைவில் கொள்ள வேண்டும். மன தைரியமே எந்த நோயிலிருந்தும் விடுபட உதவும் அருமருந்தாகும்.

படிக்க: குழந்தைக்கு குட் டச்…பேட் டச் சொல்லித்தருவது எப்படி?

பன்றி காய்ச்சல் தொற்று வியாதியா?

ஆம்.இது தொற்று வியாதி தான். பன்றி காய்ச்சல் எளிதில் ஒருவரிடம் இருந்து அடுத்தவருக்குப் பரவிவிடும். பன்றிக் காய்ச்சலைப் பரப்பும் வைரஸ் நோயாளி பயன்படுத்தும் கைக்குட்டையில் வெகு நேரம் உயிரோடு இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது. நோயாளி பயன்படுத்தும் டம்ளர் போன்ற பல்வேறு பொருள்களிலும் உயிருடன் இருக்கும். மேலும் இந்த வைரஸ் இரும்பும் பொழுதும், தும்மும் பொழுதும் அருகில் உள்ளவர்களுக்குப் பரவ நிறைய வாய்ப்புள்ளது.

பன்றி காய்ச்சல் நோய் வராமல் தடுக்கும் வழிகள் என்ன?

  1. சுத்தத்தையும் சுகாதாரத்தையும் கண்கள் போல பாவித்து கடைப்பிடிக்க வேண்டும்.
    வெளியே சென்றுவிட்டு வீடு திரும்பிய பிறகு கை கால்களைச் சுத்தம் செய்து கொள்ள வேண்டும்.
  2. எந்த உணவைச் சாப்பிடுவதற்கு முன்பும் கைகளைச் சுத்தமாகக் கழுவிக் கொண்டு பின் சாப்பிட வேண்டும்.
  3. இரண்டு வேலையும் குளிப்பது மிகவும் நல்லது.
  4. தினமும் குறைந்தபட்சம் எட்டு முதல் பத்து டம்ளர் தண்ணீரைப் பருகுங்கள்.
  5. உடலின் நோய் எதிர்ப்புச் சக்தியை அதிகரித்துக்கொள்ளத் தேவையான ஊட்டச்சத்து நிறைந்த உணவுகளை எடுத்துக் கொள்ளுங்கள். அந்த வகையில் பழங்கள், காய்கறிகள், தானியங்கள், கீரைகள், முட்டை, இறைச்சி போன்ற உணவுகளை அடிக்கடி உணவில் சேர்த்துக் கொள்வது நல்லது.
  6. உடற்பயிற்சி மிகவும் அவசியமானது. உடற்பயிற்சி செய்யும் போது உடல் ஆக்சிஜன் தேவை அதிகரிக்கும். இதனால் நோய் எதிர்ப்புச் சக்தி அதிகமாகும்.
  7. நோய்ப் பாதிப்புக்கு ஆளான நபர்களிடமிருந்து சற்று தள்ளி இருப்பது நல்லது.

இந்த பதிவின் மூலம் உலகையே உலுக்கிய பன்றி காய்ச்சல் வியாதியைப் பற்றிய பல்வேறு தகவல்களைத் தெளிவாக அறிந்து இருப்பீர்கள். இந்த விழிப்புணர்வு கட்டுரையில் இடம்பெற்றுள்ள அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் தவறாமல் கடைப்பிடியுங்கள். வந்த பிறகு துன்பப்படுவது விட வருமுன் காத்துக் கொள்வது மிகவும் சிறந்தது என்பதை நினைவில் கொள்ளுங்கள்.

 

ஒரு தாயாக மற்ற தாய்மார்களுக்கு, வார்த்தைகள் அல்லது படங்கள் மூலமாக உங்களது அனுபவத்தைப் பகிர்ந்து கொள்ள நினைக்கிறீர்களா? தாய்மார்களை இணைக்கும் குழுவோடு சேர இங்கே கிளிக் செய்யுங்கள். நாங்கள் உங்களைத் தொடர்பு கொள்கிறோம்.

null

null