பிளாஸ்டிக் பாட்டிலில் பால் தர்றீங்களா? இதை கவனிங்க!

பிளாஸ்டிக் பாட்டிலில் பால் தர்றீங்களா? இதை கவனிங்க!

இன்று உலக சுகாதார அமைப்பின் பரிந்துரையின்படி பிறந்த குழந்தைக்கு முதல் ஆறு மாதம் தாய்ப்பால் மட்டுமே கொடுக்கப்படும் வேண்டும். அதுவே குழந்தையின் உடல் ஆரோக்கியத்திற்கும், எதிர்ப்புச் சக்தி மேம்பாட்டிற்கும் ஏற்றது. ஆனால் ஒரு சில தாய்மார்களால் தாய்ப்பால் கொடுக்க இயலுவதில்லை. அதேபோல ஆறு மாதங்களுக்குப் பிறகு பல தாய்மார்கள் பாட்டில் பால் தரத் தொடங்கி விடுகின்றனர்.

மேலும் குழந்தை சார்ந்த உணவு விசயத்தில் பல்வேறு அறியாமைகள் நம் நாட்டில் நிலவி வருகின்றன என்பது மறுக்க முடியாத உண்மை. இதனால் தாய்மார்கள் பசும்பால் தர வேண்டிய சூழலுக்குத் தள்ளப் படுகின்றனர். இது மாதிரியான பல்வேறு காரணங்களால் குழந்தைகளுக்குப் பாட்டில் பால் சீக்கிரமாகவே அறிமுகமாகின்றது. இவர்கள் பசும்பாலையோ அல்லது பார்முலா பாலையோ பாட்டிலில் ஊற்றி குழந்தைகளுக்குப் பருக தருகின்றனர். இதில் குறிப்பிடத்தக்க விஷயம் என்னவென்றால் இவர்கள் தேர்வு செய்யும் பாட்டிலின் ரகம் பெரும்பாலும் பிளாஸ்டிக் ஆகவே உள்ளது.

குழந்தைக்கு பிளாஸ்டிக் பாட்டிலில் பால் கொடுக்கும் போது கவனிக்க வேண்டிய விஷயங்கள் என்ன?இந்த பிளாஸ்டிக் பாட்டில் பயன்படுத்துவது குழந்தைகளின் ஆரோக்கியத்திற்கு ஏற்புடையதா? இதன் மூலம் ஏதாவது ஆபத்து வருமா? என்று முதலில் அறிந்து கொள்ள வேண்டும். இதற்கு மாற்றாக என்னென்ன வழிகள் உள்ளன? என்பதைப் பற்றிய தெளிவும் பெற்றோர்களுக்கு மிக அவசியம். இந்தப் பதிவில் அனைத்தையும் காணலாம்.

பெற்றோர்கள் பிளாஸ்டிக் பாட்டில் தேர்வு செய்வது ஏன்?

பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளுக்கு பிளாஸ்டிக் பாட்டில்களைத் தேர்வு செய்ய பல்வேறு காரணங்கள் உள்ளன. பிளாஸ்டிக் பாட்டில்கள் மிகவும் மலிவான விலையில் கிடைக்கின்றன. மேலும் இவை எடை குறைவாக உள்ளன. பல்வேறு வடிவங்களில் எளிதாகக் கிடைக்கின்றன.இந்த பிளாஸ்டிக் பாட்டில்கள் பெற்றோர்களை அதிக அளவு கவர்ந்து விடுகின்றன. மேலும் இந்த பாட்டில்களை எடுத்துச் செல்வது மிகவும் எளிமையாக உள்ளது. அத்தோடு இல்லாமல் இவற்றைச் சுத்தம் செய்வதும் கையாள்வதும் பெற்றோர்களுக்கு மிகவும் எளிமையான விஷயம் என்பது உண்மை. பத்தில் ஒன்பது குழந்தைகளுக்கு பிளாஸ்டிக் பாட்டில் கொண்டு பால் தரப்படுகின்றது என்று ஆய்வுகள் கூறுகின்றன.

பிளாஸ்டிக் பாட்டில்களில் நஞ்சு உள்ளதா?

தற்சமயம் இந்த பிளாஸ்டிக் பாட்டில்களில் பயன்பாடு மெல்ல குறைந்து வருகின்றது.
இது ஒரு நல்ல விசயமாகவே கருதப்படுகிறது.இதற்குக் காரணம் பிளாஸ்டிக் பாட்டில்களில் பிஸ்பினால் என்னும் நஞ்சு இருக்கின்றது என்பது நிரூபணமாகியுள்ளது . இந்த பிஸ்பினால் என்னும் நஞ்சு கசிந்து குழந்தையின் பால் அல்லது தண்ணீரில் கலந்துவிடும் வாய்ப்பு உள்ளது. இதன் மூலம் குழந்தையின் உடலில் பல்வேறு ஆரோக்கிய சீர்கேடுகள் ஏற்பட வாய்ப்பு உண்டு. வயிற்று வலி, வயிற்றுப்போக்கு, சுவாச கோளாறு போன்ற பல்வேறு உடல் நிலை பிரச்சனைகள் ஏற்படும். குழந்தையின் சிறுநீரில் இந்த வேதிப் பொருள் வெளியேற வாய்ப்புள்ளது.

இதனால் சிறுநீரகத்தில் பாதிப்பு ஏற்படலாம். இந்த வேதிப்பொருளால் மிகவும் அபாயகரமானது. இந்த வேதிப் பொருள் மட்டுமல்ல பல்வேறு விதமான அபாயகரமான வேதிப்பொருட்கள் பிளாஸ்டிக் பாட்டில்களில் நிறைந்துள்ளன என்பது மறுக்க முடியாதது. இவை குழந்தைக்குப் புற்று நோய் தாக்குதலைக் கூட சாத்தியப்படுத்துகிறது என்பது வேதனையான செய்தி. 2012 யில் பிஸ்பினால் என்னும் வேதிப்பொருளைக் குழந்தைகளின் பாட்டில்களிலும், கப்களிலும் பயன்படுத்துவது தடை செய்யப் பட்டுள்ளது. ஆகப் பெற்றோர்கள் இந்த விஷயத்தில் மிக மிக எச்சரிக்கையாக இருக்க வேண்டும். இந்த பிஸ்பினால் என்னும் வேதிப் பொருள் இல்லாத பிளாஸ்டிக் பாட்டில்களைத் தேர்வு செய்ய வேண்டும். இது பாட்டிலின் லேபிளில் குறிப்பிடப்பட்டிருக்கும் அதைக் கவனமாகப் படித்துத் தெரிந்து கொள்ள வேண்டும்.

பிஸ்பினால் ஃப்ரீ பிளாஸ்டிக் பாட்டிலைப் பயன்படுத்தலாமா?

பெற்றோர்கள் ஒரு உண்மையைத் தெளிவாக உணர்ந்து கொள்ள வேண்டும். பிளாஸ்டிக் என்றாலே அது ரசாயனம் தான். இந்த ஒரு ரசாயனத்தைத் தடை செய்தால் மட்டும் பயன் கிடையாது. பிளாஸ்டிக் பாட்டிலில் உள்ள வேறு சில ரசாயனங்கள் குழந்தையின் பாலில் கலக்க வாய்ப்புள்ளது.

பிளாஸ்டிக் பாட்டிலுக்கு மாற்றாக என்ன செய்யலாம்?

இன்று சந்தையில் ஸ்டைன்லெஸ் ஸ்டீல் ரக பாட்டில்கள் கிடைக்கின்றன. இவற்றின் விலை சற்று கூடுதலாக இருக்கும்.இருப்பினும் இது உங்கள் குழந்தையின் ஆரோக்கியத்திற்கு ஏற்றதாகும். அது மட்டுமல்லாமல் இந்த பாட்டில்களை நெடுநாள் வைத்துப் பயன்படுத்திக் கொள்ளலாம். சீக்கிரம் உடையாது. மேலும் இதனைச் சுத்தம் செய்வதும் எளிமையானது தான்.

இவை சந்தைகளில் சற்று குறைந்த அளவு வடிவங்களில் மட்டுமே கிடைக்கப்பெறும். மேலும் பிளாஸ்டிக் பாட்டில் மாதிரி, இதில் பால் அளவு எவ்வளவு இருக்கிறது என்று அறிவதும் சற்று சிரமமானதுதான். இவற்றைப் பெரிய விஷயங்களாகக் கருத்தில் கொள்ளத் தேவையில்லை.

பாட்டிலைப் பயன்படுத்தும் போது மிக முக்கியமாகக் கவனிக்கப்பட வேண்டியவை என்ன ?

நீங்கள் எந்த வகை பாட்டிலைப் பயன்படுத்தினாலும் கூட பல்வேறு விஷயங்களைக் கட்டாயம் கடைப்பிடிக்க வேண்டும். அதுவே குழந்தையின் ஆரோக்கியத்திற்கு நன்மை செய்யும். படிக்க: பால் தரும் பாட்டிலை சுத்தம் செய்வது எப்படி?

1.மிகவும் தரமான பாட்டிலைத் தேர்வு செய்ய வேண்டும்.

2.மிகவும் சூடான பாலை பிளாஸ்டிக் பாட்டிலில் உடனே ஊற்றவே கூடாது. குறிப்பாகக் காய்ச்சிய பாலை அப்படியே பாட்டிலில் ஊற்றக்கூடாது. சற்று சூடு தணிந்த பிறகு பாட்டிலில் நிரப்ப வேண்டும். ஏனென்றால் அதிக சூடு பாட்டிலில் உள்ள பிளாஸ்டிக்கோடு வினைப் புரிந்துவிடும்.

3.குழந்தைகளுக்குப் பால் படுத்த வாக்கில் கொடுக்கவே கூடாது. அதிக அளவு பால் வரத்து இருக்கும் பட்சத்தில் குழந்தைக்குப் புரையேறும் வாய்ப்புள்ளது.

4.எல்லாவற்றுக்கும் மிக மிக முக்கியமாகப் பாட்டில்களை முறையாகச் சுத்தம் செய்ய வேண்டும். பாட்டிலில் கண்ணுக்குத் தெரியாத கிருமிகள் நிறைந்திருக்கும். அவ்வப்போது பாட்டில்களைச் சுத்தம் செய்ய வேண்டும்.

5.பால் கொடுத்த பிறகு ஒவ்வொரு முறையும் பாட்டிலைச் சுத்தமாகக் கழுவி வைக்க வேண்டும். இதற்கென்று உள்ள பிரகாஷ்களைப் பயன்படுத்தித் தேய்த்து இளஞ்சூடான நீரில் கழுவி அலச வேண்டும்.

6.பாட்டிலின் நிப்பிள்களை அடிக்கடி மாற்ற வேண்டும். வருடக்கணக்கில் பயன்படுத்துவதை முற்றிலுமாக தவிர்க்க வேண்டும்.

7.பால் குடித்த பிறகு பாட்டிலை உரிய இடத்தில் வைத்துப் பராமரிக்க வேண்டும்,
பாதி பாலோடு பாட்டிலை அப்படியே போட்டு விடுவதோ ,தரையில் பாட்டிலை உருள விடுவதோ அல்லது பாட்டிலை வைத்து குழந்தை விளையாடுவதையோ அனுமதிக்கக் கூடாது. இந்த விஷயங்களில் எல்லாம் பெற்றோர்கள் மிகக் கவனமாக இருக்க வேண்டும்.

8.தூங்கியபடியே பாட்டிலில் பால் குடிக்கக்கூடாது. அதே போல தூங்கிக் கொண்டிருக்கும் பொழுது குழந்தையின் வாயில் பால் பாட்டில் இருக்கக் கூடாது. இவற்றையெல்லாம் பெற்றோர்கள் கவனமாகப் பார்த்துச் சரி செய்து கொள்ள வேண்டும். இல்லாவிடில் குழந்தையின் பற்களின் ஆரோக்கியம் சீர்கெட்டுவிடும்.

9.பற்களில் சொத்தை ஏற்பட வாய்ப்பு உள்ளது. மேலும் பல்வரிசை சீராக இல்லாமல் கெட்டுவிடும்.

பிளாஸ்டிக் பாட்டில்கள் பயன்பாட்டைக் கைவிடுவது எப்படி?

1.குழந்தைகளுக்கு இரண்டு வருடம் வரை தாய்ப்பால் தரவது மிகவும் நல்லது. தாய்ப்பாலின் மூலமே நிறைவான சக்தி குழந்தைக்குக் கிடைக்கும்.எதிர்காலத்தில் குழந்தைகள் பலசாலிகளாகவும், நோய் எதிர்ப்புத் தன்மை கொண்டவர்களாகவும், புத்திக் கூர்மைக் கொண்டவர்களாகவும் விளங்க வேண்டும் என்றால் தாய்ப்பால் தருவது முக்கியம்.

2.எந்த வகையிலும் தாய்மார்கள் பிறர் நிர்பந்தத்திற்கு கட்டுப்படாமல் தங்கள் குழந்தைகளுக்குத் தாய்ப்பால் தர வேண்டும். தாய்ப்பால் சுரப்பிற்கு கை கொடுக்கப் பல்வேறு உணவுகள் உள்ளன.

3.மேலும் அந்த காலத்தில் பயன்படுத்திய சங்கு அல்லது பாலாடையைப் பயன்படுத்துவது மிகவும் சிறந்தது. இதன் மூலம் குழந்தைக்குப் புரையேறும் வாய்ப்பு இருக்காது. மேலும் இது சுகாதாரமானது கூட.

4.குழந்தைக்குப் பத்துமாதம் இருக்கும் பொழுதே டம்ளரைப் பயன்படுத்தி பால் அருந்தப் பழகி விடுவது மிகவும் நல்லது. இது பாட்டில்கள் மூலம் ஏற்படும் ஆரோக்கிய குறைபாடுகளை முற்றிலும் தவிர்க்க வழி வகை செய்யும்.

5.குழந்தை டம்பளரைப் பயன்படுத்திப் பழகிவிட்டால் பாட்டில் பயன்பாட்டிற்கு அவசியமே இருக்காது. இதன் மூலம் எந்தவிதமான சுகாதார சீர்கேடும் பாட்டில் மூலம் ஏற்படும் வாய்ப்பு முற்றிலுமாக தவிர்க்கப் பட்டுவிடும்.

இந்தப் பதிவின் மூலம் பிளாஸ்டிக் பாட்டில்களைப் பயன்படுத்துவதால் ஏற்படும் பாதகங்களை அறிந்திருப்பீர்கள். மேலும் பிளாஸ்டிக் பாட்டில்களுக்கு மாற்று வழிகள் என்ன என்பதையும் தெளிவாக உணர்ந்து இருப்பீர்கள். இதனைச் சரியாகப் பின்பற்றி உங்கள் குழந்தைகளின் ஆரோக்கியத்தைக் காப்பாற்றிக் கொள்ளுங்கள்.

 

ஒரு தாயாக மற்ற தாய்மார்களுக்கு, வார்த்தைகள் அல்லது படங்கள் மூலமாக உங்களது அனுபவத்தைப் பகிர்ந்து கொள்ள நினைக்கிறீர்களா? தாய்மார்களை இணைக்கும் குழுவோடு சேர இங்கே கிளிக் செய்யுங்கள். நாங்கள் உங்களைத் தொடர்பு கொள்கிறோம்.

null

null